tamilnadu

img

நிறைமாத கர்ப்பிணி மனைவியிடம் வந்து சேர இயலாமல் வெளியூரில் சிக்கி கொண்ட கூலி தொழிலாளி –கட்டணமின்றி பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 


மேட்டுப்பாளையம், ஏப்.13-
மேட்டுப்பாளையத்தில், கவனித்துக் கொள்ள யாருமற்ற சூழலில் சிக்கி தவித்த நிறைமாத கர்ப்பிணிக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர்களின் மனிதாபிமானம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. 
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் ராயன். வெல்டிங் செய்து தரும் கூலி தொழிலாளியான இவர் இரு வருடங்களுக்கு காதலித்து மணந்து கொண்ட தனது மனைவி நந்தினியுடன் மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் வேலை தேடி ராயன் வெளி மாநிலம் சென்றிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தீடீரென நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ராயனால் வீடு திரும்ப முடியவில்லை. இதனால் நிறைமாத கர்பிணியான நந்தினி வீட்டில் தனித்து விடப்பட்டார். 
இந்நிலையில் நந்தினிக்கு பிரசவ வலி எடுத்த காரணத்தினால் தானே மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் வயிற்றில் உள்ள குழந்தையின் தலை திரும்பி உள்ளதால் சிக்கல் ஏற்பட்டு நந்தினியை கோவை அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து உடனடியாக அவர் செல்ல அறிவுறுத்தப்பட்டார். உறவினர்களோ, நண்பர்களோ யாரும் அருகில் இல்லாத நிலையில் கடும் வலியுடன் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு செல்வது ஆபத்தானது என்பதை அறிந்த இப்பகுதி தன்னார்வர்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள சூர்யா என்ற தனியார் மருத்துவமனையை அணுகி நந்தினிக்கு உதவிட கோரிக்கை வைத்தனர். 
இதனையடுத்து அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஆதரவற்ற நந்தினியை தங்களது மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சையளிக்க துவங்கினர். மேலும், பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடுகளை செய்தனர். சிக்கலான பிரசவம் என்ற போதிலும் எவ்வித கட்டணமும் வாங்காமல் அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொண்டு சிகிச்சையளித்த மருத்துவர்களின் மனிதாபிமானத்தால் நந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததது. தற்போது தாயும் செய்யும் நலமாக மருத்துவமனையின் தொடர் கண்காணிப்பிலும் சிகிச்சையிலும் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்தும் முடங்கியிருக்கும் சூழலில் ஒரு ஏழை பெண்ணிற்கு தன்னலம் பாராமல் உதவி செய்து இரு உயிர்களை காப்பாற்றிய மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.