கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த 7 மாணவர்கள் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் தங்கி கல்லூரி பயிலும் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அந்த மாணவரை அவரது கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் தங்களது அறைக்கு அழைத்துச் சென்று, கடுமையாகத் தாக்கி, மொட்டை அடித்து அரை நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
அதனை வீடியோ எடுத்து வைத்து, மது அருந்துவதற்குப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அந்த மாணவர், தன்னை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
தங்களது மகன் தாக்கப்பட்டதைக் கேட்ட பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்திடமும் காவல் நிலையத்திலும் புகாரளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர், மாணவன் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தி 7 மாணவர்களைக் கைது செய்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதான், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகிய 7 மாணவர்களைக் கல்லூரி நிர்வாகமும் சஸ்பெண்ட் செய்துள்ளது.