தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகளை (1,040) பதிவு செய்த மாவட்டங்களின் பட்டியலில் கோவை முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் கோவை மாவட்டத்தில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில், பல ஆண்டு காலமாக, முன்னிலையில் இருந்த சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை முதல் இடத்தைப் பிடித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில், மாவட்ட வாரியாக, சாலை விபத்துகளால் நேரிடும் பலி எண்ணிக்கைத் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
இதில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் 15 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் 3,642 சாலை விபத்துக்களில் 500 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். விபவத்துக்கால அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலும், சென்னையில் பலி எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கும் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
பல வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவருவதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வதால், விபத்துக்குக் காரணமாக அதிவேகம் என்பது பல வழித்தடங்களில் இல்லாமலேயே போய்விட்டது.
இந்நிலையில் கோவையில், தொழில் வளர்ச்சி காரணமாக பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு விபத்துகளும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் நடந்த விபத்துகளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 3,642 விபத்துகளில் 1040 பேர் உயிரிழந்துள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 3,387 விபத்துகளில் 912 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் 2,642 விபத்துகளில் 876 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.