கோவை, மே 28–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை துடியலூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வைத்திருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து சாலையில் வீசி எறிந்த சமூக விரோதக் குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி துடியலூர் காவல் நிலையத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 17 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் சுமார் 1.79 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி, கோவையிலுள்ள உழைப்பாளி மக்கள் மற்றும் அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் எழுச்சியோடு கொண்டாடி வருகின்றன.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மாநகராட்சி 1 ஆவது வார்டுக்குட்பட்ட துடியலூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிளக்ஸ் பேனர் தட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த தட்டியை திங்களன்று இரவு சில சமூக விரோதிகள் கிழித்து சாலையில் வீசிச்சென்றுள்ளனர். இது மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து செவ்வாயன்று சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் என்.பாலமூர்த்திமற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணிகட்சியினர் ஏராளமானோர் துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் புகாரின் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் உடனடியாகக் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.