கோவை, ஆக.22- புதியதாக துவங்கப்படும் கல்லூரிகளில் பத்து பாடப் பிரிவுகள் துவங்க பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா தலைமை வகித்தார். சிண்டிகேட் உறுப்பினர்கள் 9 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஈரோட்டில் அமைச்சர் ஒருவரின் புதிய தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கு 10 பாடப்பிரிவு வழங்குவது தொடர்பான விவாதம் நடந்தது. இதில், அரசு மற்றும் பல்கலை விதிகளின்படி, புதிய கல்லூரி துவங்கும் போது 5 பாடப்பரிவுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது எனவும், திடீரென 10 பாடங்களுக்கு எப்படி அனுமதி அளிப்பது எனவும் கேள்வி எழுப்பட்டது இந்நிலையில், உயர்கல்வித்துறை செயலர் 10 பாடப் பிரிவுகள் துவங்க அனுமதி அளிப்பதாகவும், இனி துவங்கும் புதிய கல்லூரிகளுக்கு இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், லஞ்ச வழக்கில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் தர்மராஜ் தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக லஞ்ச ஓழிப்பு காவல்துறை யிரிடம் பரிந்துரை கேட்கப்படும் என கூட்டத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது என பல்கலை ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.