tamilnadu

img

மண் கடத்திய 4 லாரிகள்: நீடிக்கும் விசாரணை

அவிநாசி, பிப். 10- அவிநாசி மண் கடத்தியதாக பிடிபட்ட டிப்பர் லாரிகள் குறித்த விசாரணையில் மர்மம் நீடித்து வருகிறது. கடந்த ஜன.3 ஆம் தேதி அவிநாசி வட்டாட்சியர் சாந்தி ஆய்வுப் பணிக்குச் சென்ற போது சேவூர் - கோபி சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே அனுமதியின்றி மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பிடிபட்டன. அவற்றைப் பறிமுதல் செய்த வட்டாட்சியர் சேவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வட்டாட்சியர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை.  இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதே பகுதியில் மேலும் 2 டிப்பர் லாரிகள் மண் ஏற்றி வந்ததாகப் பிடிபட்டன.  அதன் ஓட்டுநர்கள் நல்லசாமி, பிச்சைமணி என தெரிந்தது. இவர்கள் ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், வேமாண்டாம்பாளையம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்ததாகத் தெரிய வந்தது. ஆனால் அனுமதி சீட்டில் வேறு முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே உரிய அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்த, நான்கு டிப்பர் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேவூர் போலீஸ் நிலையத்திற்கு அவிநாசி வட்டாட்சியர் சாந்தி கடிதம் கொடுத்தார்.  வட்டாட்சியர் புகார் கொடுத்து  ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால் விசாரணையில் மர்மம் நீடிப்பதாகவும், இது போன்ற மண் திருட்டு சம்பவங்களில் மாவட்ட ஆட்சியர்  கவனம் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.