உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் ஒரேநாளில் 823 உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
சீனாவில் உகான் மாகாணத்தில் தாக்குதலை ஏற்படுத்தி கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 165 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய 3 நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.தினமும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கிறது.
உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 823 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 984 ஆக உயர்ந்தது. பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பாதிப்பு 1 லட்சத்து 98 ஆயிரத்து 412 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள சீனாவில் நேற்று 11 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3 ஆயிரத்து 237 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 13 பேர் பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு மொத்தம் 80 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 ஆயிரத்து 614 பேர் குணமடைந்து உள்ளனர். அதே வேளையில் 2 ஆயிரத்து 622 பேர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2 ஆயிரத்து 503 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். ஈரானில் பலி எண்ணிக்கை 988 ஆகவும், ஸ்பெயினில் 533 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதே போல் நேற்று பிரான்சில் 27 பேரும், ஜெர்மனி, தென்கொரியாவில் தலா 9 பேரும், அமெரிக்காவில் 26 பேரும், இங்கிலாந்தில் 16 பேரும், கனடாவில் 4 பேரும், நெதர்லாந்தில் 19 பேரும், சுவிட்சர்லாந்தில் 19 பேரும், மலேசியா, எகிப்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சான்மரினோவில் தலா 2 பேரும், ஆஸ்திரியா, சுவீடன், ஜப்பான், கிரீஸ், பிரேசில், போலாந்து, ஈராக், லெபனான், துருக்கி, அல்ஜிரியா, மொராக்கோ, உக்ரைனில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலையடுத்து ஐரோப்பியாவில் உள்ள நாடுகள் தங்களது எல்லைகளை மூடி உள்ளன.
இத்தாலியில் உள்ள ‘லிகோ டி பெர்காமா' என்ற நாளிதழில், வெளியான கொரோனா மரண அறிவிப்பு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கடந்த மாதம் 9-ந்தேதி இந்த நாளிதழில் வெளியான மரண அறிவிப்பு ½ பக்கம் அளவுக்கு மட்டுமே இருந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வெளியான பதிப்பில், 10 பக்கத்துக்கு கொரோனா மரண அறிவிப்பு இருந்தது.
இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து டுவிட்டரில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இணையதள ஆர்வலர்கள் இத்தாலிக்காக வருத்தம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.