சென்னை, ஜூன் 1-தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள நாங்குனேரி தொகுதிக்கு ஆகஸ்டு மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனைத் தோற்கடித்தார். இதையடுத்து வசந்தகுமார், தனது சட்டமன்ற உறுப்பினர். பதவியை ராஜினாமா செய்தார். வசந்தகுமாரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் தனபால் இதுகுறித்த தகவலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு முறைப்படி தெரிவித்தார்.அதன் அடிப்படையில் நாங்குனேரி தொகுதி காலி தொகுதியாகத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி 6 மாதத்துக்குள் அங்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் ஆகஸ்டு மாதம் நாங்குனேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்துவது குறித்துத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தலுடன் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் சேர்த்துத் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாகத் தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.