சென்னை:
ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு, யுனைட்டெட் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசிற்கு பரிந்துரைத்துள்ளதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருட பட்ஜெட்உரையில் ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்றுஅறிவித்திருந்தார்.இதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (AIIEA) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
1971 ல் தேசியமயம்
இது தொடர்பாக தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் உட்பட நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் (நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷுரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ்), கடந்த 1971 ஆம் ஆண்டு, பல்வேறு முறைகேடுகள் மற்றும்நிதி மோசடிகளில் ஈடுபட்ட வந்த 107 தனியார்பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசவுடமையாக்கப்பட்டு, 4 அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களாக உருவாக்கப் பட்டன. நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ரூபாய் 19.5 கோடி அரசு முதலீட்டுடனும், 300 அலுவலகங்கள், ஆயிரம் ஊழியர்களுடன் பொது இன்சூரன்ஸ் வணிகத்தை துவங்கியது.
தற்போது 50 ஆண்டுகள் கடந்த பிறகு, நாடு முழுவதும் 8000 அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த வருடம் ரூபாய் 73,000 கோடி பிரிமிய வருவாயை ஈட்டியுள்ளது. ரூபாய் 2 லட்சம் கோடி சொத்து மதிப்பை உருவாக்கியுள்ளன. அரசின் பல்வேறு திட்டங்களிலும், பிற பொதுத் துறை நிறுவனங்களிலும் ரூபாய் 1,78,977 கோடி நிதியை முதலீடு செய்துள்ளன. நாட்டின் கட்டமைப்புத் துறைக்கு ஏராளமான நிதியை அளித்துள்ளன.நான்கு நிறுவனங்களும் 10 கோடி பாலிசிகளை விற்றுள்ளன. ஏழை,எளிய மக்களுக் கும் பல்வேறு காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகின்றன. பிரதம மந்திரி சுரக்சா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் வெறும் 12 ரூபாய் பிரீமியத்தில் தனி நபர் விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
ஒன்றிய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி ஏழை விவசாயிகளுக்கு பயனளித்து வருகின்றன.பல்வேறு மாநில அரசுகளின் குழு மருத்துவக் காப்பீடு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. வருடா வருடம் ஏராளமான இளைஞர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றது. ஏழை,எளிய மக்களுக்கு சேவையாற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை, குறிப்பாக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது, இன்சூரன்ஸ் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு சென்றடைவதை தடுக்கும். ஒன்றிய அரசின் நிதித் தேவைகளுக்கு வருடா வருடம் அளிக்கப்படும் நிதி தடைபடும். தனியார்மயத்தால் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முடங்கிவிடும். எனவே ஒன்றிய அரசு தனது முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போராட்டம்
இந்நிலையில், யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளியன்று சென்னை தலைமை அலுவலகம் முன்பு 150 ஊழியர்கள்,அதிகாரிகள் கலந்துகொண்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென் மண்டல பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த் கண்டன உரை நிகழ்த்தினார்.