சென்னை, மே 30-சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீராணம் ஏரி மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.சென்னை நகருக்கு தினமும் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம்செய்யப்பட்ட நிலையில், தற்போது தட்டுப்பாடு காரணமாக 500 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.இதில் நெமிலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு திட்டத்தில் இருந்து 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.இந்நிலையில் சிறிய அளவிலான கடல் நீரைகுடிநீராக்கும் நிலையங்களை அமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்ட மிட்டு இருக்கிறது. காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக் கேணி, எம்.ஆர்.சி. நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையையொட்டி உள்ள 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.6 மாதத்துக்குள் இந்த 5நிலையங்களை கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ரூ.120 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சிறிய அளவிலான 5 கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் தலா ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்.இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிறிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்துவிட்ட பகுதிகளை தேர்வு செய்து இருக்கிறோம். 5 சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் 5 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க முடியும். இந்த கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பைப்புகள் மூலம் தண்ணீரை அருகில் உள்ள குடிநீர் விநியோகிக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல திட்டம் தயாரிக்கப்படுகிறது’ என்றார்.இந்த திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில சுற்றுச்சூழல் கழகம், கடலோர ஒழுங்கு முறை அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.