சென்னை,ஆக.09- மூணாறு ராஜமலை பகுதியில் நிலச்சரிவால் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வேதனையுடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 29 பேர் உயிரிழந்துள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். இந்த நிலச்சரிவில் சுமார் 40 பேரை காணவில்லை. இவர்களது கதி குறித்த அச்சம் நிலவும் சூழலில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூணாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்தாலும் மீட்பு நட வடிக்கையில் மத்திய-மாநில அரசுகளும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முதல்கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
பாதிப்பை முழுமையாக மதிப்பிட்ட பிறகு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறி வித்துள்ளார். இழப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. மத்திய அரசும் மாநில அரசிற்கு தேவையான உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏற்பட்டுள்ள இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்திரவிடவேண்டுமென கேரள அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்திற் கும் மாநில செயற்குழு சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது துயரை பகிர்ந்துகொள் கிறோம். காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமடைய விழைகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.