tamilnadu

“ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம்”

 சென்னை, ஆக. 6 - ஸ்டெர்லைட் ஆலையை மூட, மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக, தமிழ்நாடு அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன் ஆஜராகி வாதிட்டார். மாசு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் ஆலைகளை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக அவர் கூறினார். அந்த வகையில் நீர் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது நியாயமானது தான் என்றார். தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையான ஸ்டெர்லைட் அதிக கழிவுகளை வெளியேற்றியதாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்ட தாகவும், அந்த ஆலையை மட்டும் குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறுவது தவறு என்றும், தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அரசியல் சாசனம் 19, பிரிவு (1) உட்பிரிவு (ஜி)., தொழில் நடத்துவதற்கான உரிமையை வழங்கியுள்ளது எனவும், இந்த அடிப்படை உரிமை என்பது தனிநபர்களுக்கானதே தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது அல்ல எனவும் வாதிட்டார். அரசுத்தரப்பு வாதம் முடிவடையாத தால், விசாரணை புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள வைகோ, ஹரி  ராகவன், ராஜு உள்ளிட்டோரின் பதில் மனுக்களுக்கு  பதிலளித்து வேதாந்தா பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. அரசியல், தனிப்பட்ட லாபத்திற்காக தங்கள் நிறுவனத்துக்கு எதிராக தவறான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.