tamilnadu

img

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அரை நூற்றாண்டுக்கு மேல் இசை ரசிகர்களை மகிழ்வித்தவர் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.  அவருக்கு வயது 74. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக இருந்தார். இவருக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு லேசான கொரோனா தொற்றுதான் என்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
பின்னர் அவரது உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.  இதனிடையே திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மீண்டும் அவரது உடல் நிலை பின்னடைவுக்கு சென்றது.  மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் சுமார் 1 மணிக்குப் பிரிந்தது.
அவரது மறைவை  இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். எஸ்பிபியின் மகன் சரணும் ட்விட்டரில் மறைவுச் செய்தியை உறுதி செய்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.