சென்னை,ஜூன் 14- முதன்மை கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெறாமல் பிளஸ்-1 வகுப்பில் புதிய பாடத்தொகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்களிடம் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு புகார் வந்துள்ளன. பத்தாம் வகுப்புக்கு இன்னும் ரிசல்ட் வெளியிடப்படாத நிலையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு தடை உத்தரவை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிளஸ்-1 வகுப்பில் ஏற்கனவே அமலில் உள்ள 600 மதிப்பெண் பாடத்தொகுப்புக்கு பதிலாக இந்த ஆண்டு முதல் 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத்தொகுப்பானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்தொகுப்பின் கீழ் மாணவர் சேர்க்கையை முன் அனுமதி பெறாமல் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.