tamilnadu

img

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை

 சென்னை,ஆக.11 நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், இன்று மட்டும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி களில், அதிகனமழை பெய்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மட்டும் நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை இருக்கும் என்றும் கூறியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டின், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேவாலாவில் 13 செ.மீ மழையும், கோவை சின்னக்கல்லாரில் 10 செ.மீ மழையும்,சோழையார் மற்றும் அவலாஞ்சி யில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை கடல் காற்று வீசி வருவதால், தென் தமிழக பகுதிகளில் மீனவர்கள் திங்கட்கிழமையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்,மாலையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்மேற்குப் பருவக்காற்று வலுவாக இருப்பதால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்கு பருவக்காற்று வலுவான நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மோதி வீசக் கூடிய நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர் தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மேற்குப் பருவமழை காலத்தில் சென்னையில் மழை குறைவாகத்தான் இருக்கும் என்றனர்.