சென்னை:
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று காவிரியில் அணை கட்டுவோம்’ என்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள் ளார். மேகதாது பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது இவ்வாறு அவர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.கடந்த மாதத்தில் நாளேடுகளில் இதுதொடர்பான செய்தி வெளியானபோது உடனடியாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானே முன்வந்து இதை வழக்காக எடுத்து மேகதாதுவில் அணைகட்டும் நடவடிக்கைகள் நடக்கிறதா ? என்பதைக் கண்டறியுமாறு குழு ஒன்றை அமைத்தது.அந்தக் குழுவை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா ஆணவமாக அறிவித்தார். இப்போது அந்தக் குழுவை பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கலைப்பதாக அறிவித்துள்ளது. மேக தாதுவில் அணைகட்டும் விசயத்தில் கர்நாடகா அரசையே ஒன்றிய பா.ஜ.க. அரசும் ஆதரிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை தமிழ் நாட்டுக்கு உள்ளது.எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் காவிரி பிரச்சனையில் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும், மேகதாதுவில் அணை கட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவும் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு முதலமைச்சரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேகதாது பிரச்சனையில் தமிழக அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேகதாது பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.