tamilnadu

img

ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

"சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது"  என ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை காபலீஸ்வரர் கோயிலின் மயில் சிலை காணாமல் போனது தொடர்பாக பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஏற்கனவே கடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் சிக்கி, பின்பு மன்னிப்பு கேட்ட ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் இதுதொடர்பாக கருத்துகளை பதிவிட்டுள்ளார். 
இதை அடுத்து, தொழிலதிபர் வேணு சீனிவாசன் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரங்கராஜன் நரசிம்மனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
விலை மாதர் எனப் பொருள்படும் வார்த்தையை சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தியதற்கு, "சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது"  என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரங்கராஜன் நரசிம்மனுக்கு ரு.2000 அபராதமும் விதித்து, அந்த தொகையை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.