அதியமான் கல்லூரியில் காலதாமதமாக துவங்கிய நுழைவுத் தேர்வு
கிருஷ்ணகிரி, ஜூலை 7- தமிழகம் முழுவதும் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் எம்பில், முனைவர், நுழைவுத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்திற்கு ஒரு மையம் என அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வு ஒரே நாளில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்பில் முனைவர், நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்கு ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. இங்கு காலை 10 மணிக்கு முதல் பிரிவும், மதியம் 2 பிரிவுகள் என மூன்று பிரிவுகளில் தேர்வு எழுத சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் 10 மணிக்கு நுழைவுத் தேர்வு எழுத சென்றவர்கள் கணினி முன்பு அமர்ந்ததும் சர்வர் வேலை செய்யாததால், தேர்வு எழுத வந்த வர்களும், கண்கானிப்பாளர்களும், நிர்வாகத்தினரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் சர்வர் பழுது மதியம் 12.55 மணி வரை நீடித்தது. 10 மணிக்கு தேர்வெழுத வந்தவர்கள் ஒரு மணிக்கு தேர்வு எழுத ஆரம்பித்தனர். இதனால் அடுத்த 2 பிரிவுகளில் தேர்வு எழுத வந்தவர்களும் காலதாமதமாக தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுவையில் மனித சங்கிலி
புதுச்சேரி, ஜூலை 7- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் ஜூலை 16-ல்புதுச்சேரியில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அரசு கொறடா அனந்தராமன், திமுக வடக்கு பிரிவு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், விசிக நிர்வாகி தமிழ்மாறன் உட்பட ஜனநாய முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வருகிற ஜூலை 16 மாலை 5 மணிக்கு புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டடணி கட்சிகளின் சார்பில் மனிதசங்கிலி போரா ட்டம் நடத்துவது. மத்திய அரசின் இந்த நாசகர திட்டத்தை எதிர்த்து 12, 13 ஆகிய தேதிகளில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டன.
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
விழுப்புரம், ஜூலை 7- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்திற்குட்பட்டது ஆலம்பூண்டி கிராமம். இங்கு வசித்து வரும் மக்களுக்கு 3 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யபட்டு வந்தது. கடும் வறட்சி காரணமாக, ஒரு நீர்தேக்கத் தொட்டியி லிருந்து மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதனால் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு முழுமை யாக குடிநீர் கிடைக்காமல் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. முழுமையான குடிநீர் கேட்டு கிராம பொதுமக்கள் ஆலம்பூண்டியில் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கிராம மக்கள் மறியலை கைவிட மறுத்தனர், தொடர்ந்து செஞ்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் வந்து சமாதானம் பேசினார். அப்போது கிராமத்தில் உரிய அனுமதி பெறாமல் பெறப்பட்டுள்ள முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டித்து அனைவருக்கும் குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பேராசிரியை குடும்பத்தை காப்பாற்றிய நாய் பாம்பை கடித்து குதறி உயிரைவிட்டது!
தூத்துக்குடி, ஜூலை 7- தனது முதலாளியின் குடும்பத்தினரை காப்பாற்றுவ தற்காக, பாம்பை கடித்து குதறி கொன்று விட்டு, நாய் உயிரை விட்ட சம்பவம் நாசரேத்தில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிலி தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரு கிறார்.இவரு டைய மனைவி பொன்செல்வி. இவர் நாசரேத்தில் உள்ள தனி யார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகின்றனர். பொன்செல்வி தனது வீட்டில் ‘டேசன்’ இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். .இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பொன்செல்வி தன்னுடைய மகன்களுடன் வீட்டில் தூங்கினார். வீட்டின்வளாகத்தில் இரண்டுநாய்களும் படுத்து கிடந்தன. அப்போது அங்கு சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு வந்ததை பார்த்த இரண்டு நாய்களும் குரைத்தன. அப்போது ஆண் நாய், அந்த பாம்பின் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது. இதனால் அந்த பாம்பு, ஆண் நாயை கொத்தியதில் நாயின் உடலில் விஷம் பரவியது. இருந்தாலும் நாய், பாம்பை தொடர்ந்து கடித்து குதறி பாம்பை வீட்டின் படிக்கட்டு வழியாக மாடிக்கு இழுத்து சென்றுள்ளது. அங்கு சிறிது நேரத்தில் அந்த பாம்பும், நாயும் இறந்தன. காலையில் தூங்கி எழுந்த பொன்செல்வி வீட்டின் கதவை திறந்தபோது, வாசலில் பெண் நாய் மட்டும் நின்றது. ஆண்நாயை தேடிச் சென்றார் .அப்போது வீட்டின் மாடியில் நல்ல பாம்பும், ஆண் நாயும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தனது முதலா ளியின் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக பாம்பை கடித்து கொன்று உயிரை விட்ட நாயை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.