நெல்லுக்கு கூடுதல் விலை த.வி.ச கோரிக்கை மனு
தஞ்சாவூர், ஆக.26- நெல்லுக்கு கூடுதலான விலை தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், நிர்வாகி என்.சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, "விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் பயிருக்கு உரிய விலை கிடைக்காமல் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ2,500 வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகிறோம். தற்போதைய நிலையில் மாநில அரசு சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ300-ம், அடுத்த ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ250-ம் உயர்த்தி தர வேண்டும் என இதில் கூறப்பட்டுள்ளது.
சமுதாயக் கூட கட்டடப் பணி
தஞ்சாவூர் ஆக.26- தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் தெக்கூர், ஆவிடநல்லவிஜயபுரம் ஊராட்சி ஆகிய 3 இடங்களில் தலா ரூ.1.4 கோடி மதிப்பில் பல்நோக்கு சேவை மைய கட்டடம், வெள்ளுர் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டப் பணிகளின் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர், ஆக.26- பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 29-ம் தேதி காலை 10 மணியளவில் ஆட்சியர் கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நீர்ப் பாசனம், வேளாண் கடன் உதவிகள் உள்ளிட்டவை மற்றும் நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி, ஆக. 26- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பள்ளிபத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு மனைவி மேரி (53), இவர் அப்பகுதியில் 13 சென்ட் நிலத்தில் வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். அந்த நிலத்திற்கு பட்டா கேட்டு திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த இடம் நத்தம் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி அதிகாரிகள் பட்டா வழங்கவில்லையாம். இந்நிலையில், திங்களன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மேரி, அவரது மகள் பபிசுதா, அவரது கணவர் மகேஸ், அவர்களின் நான்கரை வயது குழந்தை ஆகி யோருடன் வந்துள்ளார். அப்போது மேரி, தான் பையில் மறைத்து வைத்திருந்த 2 பாட்டில்களிலிருந்து மண்ணெண்ணெயை தனது உடலிலும், மகள், மற்றும் குழந்தையின் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள் ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் அவர்களை காப்பாற்றினர்.