சென்னையில் பணியின்போது பயணி ஒருவர் தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
"சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 24.10.2024 இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் குமாரின் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் ஜெகன் குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.