tamilnadu

img

தினசரி குப்பைகளை அகற்றுக மண்டல அலுவலகம் முன் சிபிஎம் போராட்டம்

சென்னை, அக். 24 - வேளச்சேரி பகுதியில் தினசரி இரண்டு முறை குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். குடியிருப்பு பகுதிகளில் தினசரி சேரும் குப்பைகளை முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. எனவே தினசரி இரண்டு முறை குப்பைகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று (அக்.24) அடையாறில் உள்ள 13வது மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், தெருத்தெருவாக வந்து குப்பை வண்டிகள் குப்பையை சேகரித்து செல்ல வேண்டும், உடைந்த குப்பைத்தொட்டிகளை மாற்றி புதிதாக வைக்க வேண்டும், குப்பை அள்ளியவுடன் பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், கழிவு நீர் அடைப்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும், கொசு உற்பத்தியாகும் இடங்களில் மருந்து அடிக்க வேண்டும், டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுக்க வட்டந்தோறும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து மண்டல உதவி ஆணையர் திருமுருகன் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் கே. வனஜகுமாரி, நிர்வாகிகள் ரபீக், சிங்காரம், கருணாநிதி, ராஜேந்திரன், குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் தரப்பிலிருந்து செயற்பொறியாளர், பகுதி பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனஜகுமாரி, “தினசரி குப்பைகள் குவியாமல் அகற்றப்படும். குப்பை தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், குப்பை அள்ளிய பிறகு பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்படும், தெருத்தெருவாக சிறு வாகனங்கள் மூலம் குப்பை சேகரிக்கப்படும், வட்ட வாரியாக மருத்துவ முகாம் நடத்தப்படும். இதர கோரிக்கைகளையும் ஏற்று செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து செயல்படாவிடில், அடுத்தகட்ட போராட்டத்திற்கு சொல்வோம்” என்றார்.