tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களுக்கு தையூர் வீட்டுமனையை பிரித்து வழங்க பதிவாளர் உறுதி

சென்னை, ஆக. 20- உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மாநகர போக்குவரத்துக் கழக ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்களுக்கு தையூர் வீட்டுமனை பிரித்து வழங்கப்படும் என கூட்டுறவு வீட்டுவசதி பதிவாளர் உறுதி அளித்ததின் பேரில் முற்றுகைஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.  பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் சார்பில் 1997ஆம் ஆண்டு தையூர் வீட்டுமனைத் திட்டம் துவக்கப்பட்டு, அதில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றக் கூடிய 1357 பேரிடம் வீட்டு மனைக ளுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டது. ஆனால் 20 ஆண்டு களாகியும் இன்னும் தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பிரித்து வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து நலச்சங்க நிர்வாகி க.சேகர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் பயனாளிகளுக்கு 12 வாரத்திற்குள் வீட்டுமனைகள் பிரித்து கொடுக்கவேண்டும் என தீர்ப்பு அளித்தது. ஆனால் அரசு நிர்வாகம் நிலத்தை வழங்கவில்லை. இதை கண்டித்து மாநகர போக்குவரத்துக் கழக ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் பதிவாளர் அலுவல கம் செவ்வாயன்று (ஆக.20) முற்றுகை யிடப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி அனுகுபாதை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திட்டமனை வரைபடம் தயார் செய்தல், மனை பிரிவுகளுக்கான உரிய துறையில் அனுமதி பெறுதல் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கூட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும். அங்கு நடக்கும் சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். இறந்துபோன 300க்கும்  மேற்பட்ட உறுப்பினர்களின் வாரிசுகளை சொசைட்டி யில் உறுப்பினராக்க வேண்டும் என நலச் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினர்.  6 மாதம் கெடு  மாநகர போக்குவரத்துக் கழக ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்கள் நலச்சங்கத் தலைவர் வரதராஜன்,  பொதுச் செயலாளர் எஸ்.கருணாகரன், பொருளாளர் முருகேசன், துணைத் தலைவர் கே.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகளோடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காலநிர்ணயம் செய்து வீட்டுமனைகளை வழங்க வேண்டும் என  துணைப் பதிவாளரிடம் வலியுறுத்தினார். அடுத்த 6 மாதத்திற்குள் உயர்நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் வீட்டுமனைகள் பிரித்து வழங்கப்படும். இறந்துபோன உறுப்பினர்களின் வாரிசுகள் உறுப்பினராக்கப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது.