tamilnadu

img

சுற்றுச்சூழல் மாசு: மரணபயத்தில் மணலி மக்கள்

“எமன் ஆளும் நரகம்  எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது. ஒருவேளை இருந்தால் அனேகமாக அது எல்லா வகையிலும் மாசடைந்து நாங்கள் வாழும் மணலி மாதிரியாகத்தான் இருக்கமுடியும் என்று நோயாளிக்குழந்தையை கையில் ஏந்தியபடி புலம்பிக்கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயது ஏழைத்தாய்”.இந்த புலம்பலிலுள்ள உண்மையை ஆராய சென்னையின் மையத்திலிருந்து 15 கி.மீ தொலைவேஉள்ள எண்ணெய், ரசாயன ஆலைகள்நிரம்பிய மணலிப் பகுதிக்கு விரைந்தோம். திருவொற்றியூர் மாட்டுமந்தையை அடுத்து ரயில்வே குடியிருப்பை தாண்டியதும் குப்பைமேடுயும் துர்நாற்றமும், குண்டும் குழியுமான சாலை, புழுதி படர்ந்த காற்றுநம்மை வரவேற்றது. கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றை தூக்கிப்பிடிக்கும் ஆளுங்கட்சியினரின் சுயலாப வெறிதான் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. மக்கள்தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவால் பாதிப்புஏற்படுவதற்கு ஒரு முக்கியக்காரணியாக இருந்தாலும் ஆளும் வர்க்கம் அதனை சமூக அக்கறையோடு கண்காணிக்கவேண்டியது கடமை உள்ளது அல்லவா? மாசுகட்டுப்பாடு வாரியம் இருந்தும் என்ன செய்கிறது என்பதுதான் மக்களிடம் எழும் கேள்வியாகும். புறநகராக இருந்த மணலி, சேக்காடு மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. கனிசமான உடல் உழைப்பு தொழிலாளர் களும், நடுத்தர மக்கள் வாழும் இங்கு சாக்கடை கழிவுநீர்,  திடக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளால் பஞ்சபூதங்களும் தீய சக்தியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. காற்று, ஒலி, நிலத்தடி நீர் இவையாவும் அபாயக் குறியீடாக மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை என்கினறனர் சமூக ஆர்வலர்கள்.

மர்ம வாயு
சென்னை உரத்தொழிற்சாலை (எம்எப்எல்), சிபிசிஎல், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், சிடெக்ஸ் பெட்ரோகெமிக்கல், தமிழ்நாடு பெட்ரோ கெமிக்கல்ஸ், ஸ்ரீராம் பைபர்ஸ், பால்மர் லாறி, கோத்தாரி, தோஷிபா உள்ளிட்ட பல நிறுவனங்கள் மணலியில் உள்ளன. இவற்றின் மூலம்வெளியேறும் கழிவுகளை கண்காணிக்க முறையான ஏற்பாடுகள் பற்றி யாருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை, மழைக் காலங்களில் உரத் தொழிற்சாலை மற்றும் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து மர்ம வாயு திறந்துவிடப்படுகிறது. இந்த வாயுவை நுகரும் மக்கள் நெஞ்சு, கண் எரிச்சல்,மூச்சுத் திணறல், தோல் அரிப்பு, வாந்தி, மயக்கம், உயர்ரத்த அழுத்தம்,தொண்டை பிடிப்பு என உபாதைகள் ஏற்படுகிறது. இது விஷ வாயுவோ என்ற பீதி கூட அவ்வப்போது எழும். ஆனால் இது விஷத்தன்மை அல்ல. ஹைட்ரோ கார்பனின் அளவுஅதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பு என ஏசி அறையில் பாதுகாப்பு சாதனங்களுடன் முகமூடி அணிந்து பணி செய்யும் ஆலை அதிகாரிகள் சர்வசாதாரணமாக தெரிவிக்கின்றனர்.

விஷமாக மாறிய கால்வாய்
மணலியின் நுழைவாயிலாக இருக்கும் எம்ஜிஆர் நகர் கால்வாய் தூர்ந்து போய்யுள்ளது. இது மணலி மற்றும் மணலி புது நகரிலி ருந்து வெளியேறும் மழைநீரை பக்கிங்காம் கால்வாயில் சேர்க்கும் நீரோடையாக இருக்கிறது. தற்போது, வணிகநோக்கோடு சிலர் உரம், ரசாயனப் பைகளை கழுவி வருவதால் விஷத் தன்மையாக மாறிவிட்டதால் மீன்கள் செத்துமிதக்கின்றன. மனிதர் மட்டுமல் லாது கால்நடைகள் கூட பயன்படுத்த முடியவில்லை. 

நோய் பரப்பும் குப்பைமேடு
திருவொற்றியூர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மணலி அருகே கொட்டப்படுகிறது. நாளொன்றிற்கு ஆயிரக்கணக்கான டன் திடக்கழிவுகள் இங்கு கொட்டப்படுகிறது.  இந்த திடக்கழிவு
களால் பெருமளவு பாதிப்படுவது மணலி பகுதி மக்கள் தான். இந்த குப்பைகள் அவ்வப்போது மர்மநபர்களால் கொளுத்தப்படுவதா கவும் இதன் வாயிலாக வெளியேறும் புகை காற்றின் வீச்சால் மணலி பகுதி மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவருவதாக கூறப்படுகிறது. தற்போது இங்கு திடக்கழிவு முறையாக பராமரிக்கப் பட்டு மக்கும், மக்கா கழிவுகள் என பிரிக்கப்படுவதாகவும்  உரம் தயாரிக்கப்படுவதா கவும்  அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டாலும் நேரில் பார்த்தபோது அது முற்றிலும் பொய் என தெரிந்தது. பெயரளவில் மட்டுமே இத்திட்டம் உள்ளதாகவும் பழிவாங்கப்படும் மாநகராட்சி ஊழியர்களை பணியமர்த்தப்படும் இடம் இது என சில ஊழியர்கள் கண்ணீரோடு தெரிவித்தனர்.

திறக்கப்படாத அரசுக் கட்டிடங்கள்
மணலியும் திருவொற்றியூரும் இணையும் சாலையோரத்தில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் வாகன இயக்கூர்தி நிலையம் தமிழ்நாடுஅரசாங்கத்தால் ரூ 5.24 கோடி செலவில்கட்டப்பட்டது. கடந்த 27.2.2019ல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த அரசுக்கட்டிடம் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. மணலிமார்க்கெட் அருகே கட்டப்பட்ட சமுதாயக்கூடம் உள்ளிட்டமக்களின் வரிப்பணத்தால் கட்டப்பட்டபலக்கட்டிடங்கள் உடனே பயன்பாட்டிற்கு வரவேண்டும் என அகஸ்டின் பாபு என்ற இளைஞர் தெரிவித்தார்.

கரித்துகள் மாசு
மணலியின் மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய நிறுவனமான சிபிசிஎல் ஆலையின் 2வது வாயலில் கோக் எனப்படும் ரசாயனத்துகள்களால் அப்பகுதியில் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் மோகன் கூறுகையில்,இந்த கரித்துகள்கள் கோக் எனப்படும் ஒருவகை ரசாயனக்கழிவுப்பொருளாகும். கச்சா எண்ணையிலிருந்து கடைசியாக தயாரிக்கப்படும் தாருக்கு அடுத்த கழிவாக இதுவெளியேற்றப்படுகிறது. இந்த கோக் எனப்படும் கரித்துகள்கள் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து லாரிகள் மூலம் ஆந்திராவிலுள்ள செங்கற்சூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இது எளிதில் எரியும் தன்மைகொண்டதால் சூளைகளில் இதை பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். திருவொற்றியூர் மற்றும் மணலி புதுநகரிலிருந்து வரும் மக்கள் சிபிசிஎல் பிரதான வாயிலைக் கடந்துசெல்லும்போது இக்கரித் துகள்களின்தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த பிளாண்ட்டில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயால்கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். நிலம் மற்றும் நிலத்தடி நீரின் உயிர்ச்சத்தை மெல்லக்கொல்லும் தன்மை உடையது இது என்றார். இதே போன்று மோசமான விஷத்தன்மையுடைய ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் சீடெக்ஸ்பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தை ஆய்வு செய்யவேண்டும். இந் நிறுவனத்தை யொட்டி யுள்ள குடியிருப்பு மக்கள் அவ்வப்போது மர்மநோயால் பாதிக்கப் படுகின்றனர். இப்பகுதியில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும். மாசுகட்டுப்பாட்டுவாரியத்தின் கிளை அலுவலகத்தை இப்பகுதியில் நிறுவவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்
மணலி, சேக்காடு, கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் சந்திக்கும் சுகாதாரசீர்கேடு பிரச்சனைகள் வார்த்தையால் விளக்கமுடியாது. இந்தியாவின் மிகப்பழமையான மாநகராட்சியாக கருதப்படும் சென்னையில்தான் இந்த அவலக்கேடு. அறிவியல் பூர்வமான அணுகுமுறையில்லாத ஆட்சியாளர்களும் லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகள் இருக்கும் நாட்டில் நாங்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிச் செயலாளர் சிட்டிபாபு. 

ம.மீ.ஜாபர்