சென்னை, அக்.3- தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அரசு மருத்துவமனையில் 100 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் டெங்கு அறிகுறியுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 முதல் 40 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ செல்ல வேண்டும். 3 நாட்களுக்கு பிறகும் தீவிர காய்ச்சல் இருந்தால் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு டெங்கு அறிகுறி இருந்தால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மருத்துவமனைகளில் கண்காணிப்பதோடு நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வீடுகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை நீர் வீடுகளைச் சுற்றி தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றாலே உயிர் இழப்பைத் தவிர்க்கலாம் என்றனர்.