tamilnadu

img

தமிழ்நாட்டில் திருநர்களின் நலன் காக்க தனிக் கொள்கை உருவாக்க சிபிஎம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் திருநர்களின் நலன் காக்க தனிக் கொள்கை உருவாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் திருநர் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர் கொள்கை தொடர்பாக உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், தனித்தனி கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருநர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்த முக்கியமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டுமென சிபிஎம் கேட்டுக்கொள்கிறது.

எல்.ஜி.பி.டி.கியூ.ஐ.ஏ எனப்படும் வெவ்வேறு பாலின அடையாளத்தவர்  ஒரே குழுவாக குறிப்பிடப்பட்டாலும் கூட,  திருநர் என்போர் தம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒதுக்குதல்களும், துன்புறுத்தல்களும் சில குறிப்பான கொள்கை தலையீட்டின் மூலம் மாற்றியமைக்க தேவையுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது திருநர்களின் பிரச்னை என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இந்த பிரிவினருக்கென்று தனிக்கொள்கை உருவாக்க வேண்டுமென மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே, திருநர்களுக்கு என முதன் முதலில் கொள்கைகளை உருவாக்கியது  கேரள இடதுசாரி அரசு என்பதும்,  திருநங்கையரின் கோரிக்கை அடிப்படையில், 2008ல் தமிழ்நாடு திருநங்கையர் நலவாரியத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு என்பதும் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று.  

திருநருக்கு நிகழ்ந்துவரும் சமூக ஒதுக்குதல்கள் காரணமாக யாசித்தல், பாலியல் சுரண்டல் போன்ற அவலங்களுக்குள் தள்ளப்படுவதை தடுக்க, இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்யும் விதத்தில்  திருநர்களுக்கான தனிக்கொள்கையை உருவாக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.