2019-இல் தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"2019-இல் தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது.
2019 பிப்ரவரியில் அம்பலத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் வலுவான போராட்டங்களை நடத்திய பின்புலத்தில் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. செல்போனில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் பதிவு செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் குழுக்களில் அவை பகிரப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததும் துவக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தாமதத்தையும், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அச்சத்தையும் உருவாக்கி இருந்தது. இதற்கு எதிரான போராட்டங்கள் பெரும் வீச்சோடு நடந்த பின்னரே 16 மாத காலத்திற்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 9 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கு ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளிடம் தண்டத்தொகை வசூலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதிமுக நிர்வாகி அருளானந்தம் என்பவரும் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவர். இந்த தீர்ப்பு பாலின வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. பாதிக்கப்படும் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியதுமாகும்.
இந்த வழக்குகளில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டது பாராட்டத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது என்பதும் போற்றுதலுக்குரியதாகும்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் மனித சமூகத்தின் மாண்புகளுக்கு எதிரானது; இழிவானது. ஆகவே இத்தகைய வன்முறைகள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தருகிற வகையில் நீதி கிட்டும் போராட்டத்தில் துணை நிற்பதும் நாகரீக சமூகத்தின் கடமையாகும்.
முதன் முதலில் புகார் அளித்த பெண்ணின் விபரங்கள் பொது வெளியில் அரசின் தரப்பில், காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது என்பது தற்செயலானது எனக் கருத முடியாது; மேற்கொண்டு பெண்கள் புகார்களை துணிச்சலோடு அளிக்க முன் வருவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டதே ஆகும். ஆகவே பாலியல் வழக்குகளில் புகார் செய்யும் பெண்களின் விபரங்களை ரகசியமாக பாதுகாப்பது உறுதி செய்யப்படுவதே நீதி கிடைப்பதற்கு வழி வகுக்கும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிக்கான உறுதியை வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வது பெண்களுக்கு பெரும் நம்பிக்கையை தருவதாகும். சுய கௌரவம், குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்றெல்லாம் வன்முறைக்கு இலக்காகும் பெண்களை மௌனித்துப் போகச் செய்யும் போக்கை இப்பெண்கள் முறியடித்து இருக்கிறார்கள். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனமாரப் பாராட்டுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அக்குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், மக்களைத் திரட்டி களத்தில் போராடிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்திற்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.