tamilnadu

img

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் கலந்தாய்வு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 – 25 ஆம் கல்வியாண்டுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கவுள்ளது. 

தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்.சி. பி.காம். பி.ஏ என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான, 2024- 25 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினார்கள். இந்த சூழலில், கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களை பெற்றார்கள்.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 15 ஆம் தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாரகள். 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு வருகிற 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.