போரூர், நவ.1- சென்னை சாலிகிராமத்தில் ஆட்டோவில் பெண் தவறவிட்ட 25 பவுன் நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை அனைவரும் பாராட்டினர். தேனாம்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் சாலிகிராமத்தில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள ஆட்டோவில் சென்றார். திருமண மண்டபத்துக்குள் சென்று பார்த்த போது 25 பவுன் நகைஇருந்த கைப்பை மாயமாகி இருந்தது. இதுகுறித்து அவர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் ஜெய்பாலாஜி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விஜயலட்சுமி பயணம் செய்த ஆட்டோவின் ஓட்டுநர் அங்கு வந்து தவறவிட்ட 25 பவுன் நகை இருந்த பையை அவரிடம் ஒப்படைத்தார். பயணி தவறவிட்ட நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரான தியாகராயநகரை சேர்ந்த உதயகுமாரை காவல்துறையினர் பாராட்டினர்.