கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதிநேரமாக கேட்டரிங் வேலை செய்து வந்த மாணவர், கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(20) தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பி.சி.ஏ படித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதிநேரமாக கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி, திருமண மண்டபம் ஒன்றில் சமையல் வேலைக்குச் சென்றிருந்தார் சதீஷ். அப்போது அண்டாவில் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் சதீஷ் தவறி விழுந்துவிட்டார். அவர் உடல் முழுவதும் கடுமையாக தீக்காயங்கள் ஏற்பட்டது. அவருடன் சமையல் பணியில் இருந்தவர்கள் சதீஷை மீட்டு உடனடியாகக் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த கல்லூரி மாணவர் சதீஷ், சிகிச்சைப் பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.