சென்னை,ஜூன் 26- சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். பகல் 1.45 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது. வருகிற வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. அதில், பட்ஜெட் மீது, துறைகள் வாரியான, மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவை கூடும் முன்பு, பேரவைத் தலைவரை அவரது அறைக்குச் சென்று முதலமைச்சர் சந்திப்பது வழக்கம். இந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை பேரவைத் தலைவர் ப.தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.