சென்னை:
ஆவின் நிறுவனத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஜுன் 11 அன்று மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.முகமது அலி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக சுமார் 5 லட்சம் குடும்பங்கள்தினமும் சுமார் 35லட்சம் லிட்டரி லிருந்து 40 லட்சம் லிட்டர் வரை பாலை ‘‘ஆவின்’’ நிறுவனத்திற்கு வழங்குகிறார்கள். இதுதவிர சுமார் 10 லட்சம் குடும்பங்கள் தினமும் சுமார் ஒன்றரை கோடி லிட்டர் அளவிற்கு தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களுக்கு பாலை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளினால் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் - மற்றவர்களைப் போலவே கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
பால் பணம் பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும்
எனவே “ஆவின்” நிர்வாகம் பால் கொள்முதல் செய்கிற மாவட்ட ஒன்றியங்களுககு 3 மாதங்கள் வரையிலான பாலுக்கு பணம் வழங்கவில்லை. சுமார் ரூ.500 கோடி வரை பாக்கி உள்ளது. பாலுக்கான பணம் கிடைக்காததால் பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, பாக்கிகள் முழுவதையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் கொள்முதல் விலைக் குறைப்பைத் தடுத்திட வேண்டும்
தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் பல பகுதிகளில் பால் கொள்முதலை நிறுத்திவிட்டனர். பல பகுதிகளில் 1 லிட்டருக்கு ரூ.10லிருந்து ரூ.15வரை கொள்முதல் விலையைக் குறைத்துவிட்டனர். இதனால் பால்உற்பத்தியாளர்கள் நட்டத்திற்குள்ளாகி யுள்ளனர். எனவே அரசு அறிவித்து, நடைமுறையில் உள்ள பசும்பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.32, எருமைப்பாலுக்கு ரூ.41க்கு குறையாமல் அனைத்து தனியார் நிறுவனங்களும் பாலுக்கு கொள்முதல் விலையை வழங்க வேண்டும் எனதமிழ்நாடு அரசு உத்தரவிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், இந்த கொள்முதல் விலை உயர்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புசெய்யப்பட்டதாகும். தற்போதைய சூழலில் இதை உயர்த்தி வழங்கிட அரசு பரிசீலிக்க வேண்டும்.
“ஆவின்” பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும்
பால் அத்தியாவசியப் பொருள் என்ற அடிப்படையில் ரேசன் கடைகள், ஆரம்பசங்கங்கள் மூலமாக பால்பவுடர் மற்றும் பால் - பொதுமக்களுக்கு வழங்குவது என்ற திட்டத்தை அமல்படுத்தினால் உடனடியாக சுமார் 10 லட்சம் லிட்டர் அளவிற்கு “ஆவின்” நிர்வாகம் பால்கொள்முதலை அதிகப்படுத்த முடியும்.இதன் மூலம் தினமும் 50லட்சம் லிட்டர்அளவிற்கு பால் கொள்முதல் செய்ய முடியும். முதல் அமைச்சர் குழந்தைகள் சத்துணவுத் திட்டத்திலும் பாலையும் சேர்த்து வழங்கவேண்டும். கடுமையான “கொரோனா” பாதிப்பு சூழலில், ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் இத்திட்டங்கள் பேருதவியாக அமையும்.
“ஆவின்” நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு தற்போது “ஆவின்” பால் விற்பனை விலையில்1 லிட்டருக்கு ரூ.3 குறைத்ததை பொதுமக்கள் நலன் கருதி வரவேற்கிறோம். ஆனால் இதனால் ஆவினுக்கு 1 வருடத்திற்கு ரூ.300 கோடி வரை நட்டம் ஏற்படுகிறது. கடந்த சில வருடங்களாக “ஆவின்” நிர்வாகமும், மாவட்டஒன்றியங்களும் கடும் நட்டத்தில் உள்ளதாக அறிகிறோம். கடந்த ஆட்சியில்17 மாவட்ட ஒன்றியங்களை 25 ஒன்றி யங்களாக அவசியமில்லாமலேயே பிரித்தார்கள். இதனால் பெரிய அளவில் அதிகாரிகள், பணியாளர்கள் நியமனங்கள் முறைகேடாக நடைபெற்றுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 500க்கும்மேற்பட்ட புதிய ஆட்கள் நியமனங்கள் “ஆவின்” மாவட்ட ஒன்றியங்களில் நடந்துள்ளது. இதில் பெரும்தொகை லஞ்சமாக கைமாறி உள்ளதாக அறிகிறோம். இந்த ஊழலுக்கு முன்னாள் பால் வளத்துறை அமைச்சர், ஆவின்ஆணையர் - இவர்களுக்கு உடந்தையாக இத்துறையின் தமிழ்நாடு அரசுசெயலாளர் கோபால் உடந்தையாக இருந்தார் எனக் கவனப்படுத்துகிறோம்.
நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்
“ஆவினும்” மாவட்ட ஒன்றியங்களும் கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படுவதால் இதைப் பாதுகாப்பதற்கு நிர்வாக சீர்திருத்தம் செய்யவேண்டும்; பால் கொள்முதல் - விற்பனை அளவிற்கேற்ப அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
ஊழல் முறைகேடு தடுக்கப்பட வேண்டும்
அதிமுக ஆட்சியில் ஆரம்ப சங்கங்களுக்கு மாநில அளவில், பால் கறப்பவர்களுக்கு கையுறை, தொப்பி, பேனர் என சில பொருள்களை ஒரே நேரத்தில் வழங்கினார்கள். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.300லிருந்து ரூ.400 வரைதான் இருக்கும். ஆனால் இதற்காக ஆரம்பபால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலிருந்து அவர்களது பால் பணத்திலிருந்து ரூ.3000 அளவிற்கு பிடித்துக்கொண்டார்கள். செயல்படக்கூடிய சுமார் 10ஆயிரம் ஆரம்ப சங்கங்களிலிருந்து இந்த தொகை பிடித்துக் கொள்ளப்பட்டது. இத்துறையில் அமைச்சராக இருந்தவரும் அதிகாரிகளும் சேர்ந்து இதைச் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.ஆரம்பப் பால் சங்கப் பணியாளர் களை கொரோனா பாதிப்பு காலங்களில் முன்களப் பணியாளர்களாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும். பால் வளத்துறையில் சிலஅதிகாரிகள் தவறாக வழி நடத்து கிறார்கள். அதன்மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இப்பிரச்சனைகள் தொடர்பாக முதலமைச்சர், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பால் உற்பத்தியாளர்களின் ஆரம்ப சங்கங்களையும், ஆவின் நிர்வாகத்தையும் பாதுகாத்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.