சென்னை, மே 16-சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினசரி சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சிறு பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அப்போது அங்கு இடிக்கப்படும் பழைய கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுகளை அந்தந்த பகுதி நடைபாதையிலும், சாலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் பாதசாரிகளுக்கும், வாகன் ஓட்டிகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.இதுபோன்று சாலையில் குப்பைக் கழிவுகளை கொட்டுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் அந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்தபிப்ரவரி மாதம் 6ஆம் தேதி மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை செயலாளர்ஹர்மந்தர் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னைகொண்ணூர் நெடுஞ்சாலையில் வில்லிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையிலேயே கட்டிட இடிபாடுகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கொட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை. இப்போது கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இரவு நேரங்களில் தனியார் கட்டுமான நிறுவனங்கள் இதுபோன்ற கட்டிடக் கழிவுகளை சாலையிலேயே கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.சாலைகள், பாலங்கள், சாலை மேம்பாலங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பெரிய கட்டுமானங்களில் ஈடுபடுபவர்கள் நாள்தோறும் 20 டன் கழிவுகளை உருவாக்குகின்றனர். ஒரு கட்டுமானத் திட்டத்தில் சுமார் 300 டன் கட்டிடக் கழிவுகள் உருவாகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் கட்டிடக் கழிவுகளை தரம்பிரிப்பதற்கும் கழிப்பதற்குமான வசதிகள் இருந்தால், கட்டுமானக் கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுமானப் பொருட்களாக குறைந்த செலவில் பயன்படுத்த முடியும். அத்துடன் நகரத்தில் உள்ள நீர்நிலைகள், பள்ளங்களில் போய் சேர்ந்து மாசுபடாமலும் தடுக்க முடியும். கட்டுமானக் கழிவுகளை நொறுக்கி சுத்தம் செயது ரெடிமிக்ஸ் கான்கிரீட், கொப் ஸ்டோனஸ், சிமெண்ட் செங்கல்கள், வழித்தடக் கற்கள், ஹாலோ பிரிக்ஸ் மற்றும் மேனுபேக்சாட் மணலாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.எனவே மாநகராட்சி நிர்வாகம் இதுபோல் சாலையில் கழிவுகளை கொட்டும் தனியார் நிறுவங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கட்டிடக் கழிவுகளை தரம்பிரிப்பதற்கும், கழிப்பதற்குமான வசதிகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.