திருவள்ளூர், மே 12-திருவள்ளூர் கே.ஜி.பி.நகரில் வசிப்பவர் வர்மா. ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை பொறியாளர். இவர் கடந்த 28ஆம் தேதி உடல் நிலை சரியில்லாத தன் மனைவியை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கச் சென்று இருந்தார்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த வைரகற்கள் பதிக்கப்பட்ட 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம்ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது குறித்து திருவள்ளூர் நகர காவல்நிலையத்தில் புகார் செய்ததைதொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர் பழைய குற்றவாளிகள் குறித்த விவரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.இதில் கொள்ளையில் ஈடுபட்டது பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தமணிகண்டன் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் காவல்துறையினர் திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.