தமிழ் எழுத்துக்களுடன் சமஸ்கிருத எழுத்துக்களையும் இணைத்து பதிவிட்டிருக்கும் அண்ணாமலையின் பதிவு மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
நேற்றைய தினம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் தமிழ்த்தாய் புகைப்படத்தை பதிவு செய்து, எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்று பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தமிழ் எழுத்துகளுடன் சேர்த்து சமஸ்கிருத எழுத்துக்களையும் இணைத்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில்,
தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது.
இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார். என பதிவு செய்துள்ளார்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில், பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி என்கிற ஒற்றைவாத முழக்கத்தை எழுப்பி வருகிறது. அந்த வகையில் இதுபோன்ற சமஸ்கிருத திணிப்பும் ஒரே மொழி என்கிற தனது அரசியல் திட்டத்தை மக்களிடையே பரவலாக்கும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.