தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயா என்ற பெண்ணை காதலித்து கடந்த மே 15 ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை எதிர்த்த பெண் வீட்டார் கூலிப்படையினரைக் கொண்டு தனுஷின் சகோதரர் இந்திரசாந்தை கடத்தினர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடத்துவதற்காக திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸ் குழு ஆண்டர்சன் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றது. ஆனால் அவரது கட்சித் தொண்டர்கள் போலீசாரை வீட்டுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில், ஜெகன் மூர்த்தி தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் திங்களன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். தவறினால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
சிறுவன் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், போலீசார் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். விசாரணைக்கு ஜெகன் மூர்த்தி தனியாகச் செல்ல வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். ஜெயராம் மீது உரிய நடவடிக்கை எடுக்கு மாறும் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது ஆள் கடத்தல், மிரட்டல் மற்றும் அத்துமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவாலங்காடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.