புதுதில்லி,ஜூலை 17- எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகா ரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்றும் அதேநேரம், சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏக்களை, சபாநாயகர் நிர்ப்பந்திக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தர விட வேண்டும் எனக் கூறி அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.
இதில் ஜூன் 17 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில், கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடித விவகாரத்தில், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க, முடிவெடுக்க, கர்நாடக சபாநாயகருக்கே முழு அதிகாரம் உள்ளது. எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ சபாநாயகருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்க தடை இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேவேளையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரிலோ, அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பிலோ பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏக்களை, சபாநாயகர் நிர்ப்பந்திக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அப்படியே அமல்படுத்தப் போகிறேன். திட்டமிட்டபடி நாளை (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கூட்டத்தொடரில் பங்கேற்க, அதிருப்தி எம்எல்ஏக்களை வலியுறுத்தப் போவதில்லை என்றும் உறுதிபடக் கூறியுள்ளார். இதனிடையே சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று மும்பையில் தங்கியுள்ள 12 அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர். அனைத்து அதிருப்தி எம்எல்ஏக்களும் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.