குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனும் கோரிக்கையுடன் தில்லியில் நடந்து வரும் போராட்டத்தின் போது அந்த சட்டத்திற்கு ஆதரவு போராட்டம் என்ற பெயரில் வன்முறை நிகழ்த்தப்பட்டதை அனைவரும் அறிவோம். அந்த வன்முறையின் போது அமைதியை வலியுறுத்திய காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டார் எனத் துவங்கி நம் நாட்டில் 35 லட்சம் பேர் வரை உரிமம் பெற்று 97 லட்சம் வரை துப்பாக்கிகள் வைத்திருப்பதாகவும், கள்ளத்துப்பாக்கிகள் 6 கோடி வரை இருக்கும் எனவும் குறிப்பிட்டு 1959 ம் ஆண்டின் ஆயுத சட்டம் இன்றுவரை நீடிக்கிறது,எனவே அதில் திருத்தம் கொண்டு வந்தால் இந்தக் குற்றங்கள் குறையலாம் எனும் வகையில் முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் எழுதிய கட்டுரையை நாளிதழ் ஒன்றில் வாசிக்க நேர்ந்தது .
ஆளுவோரின் கோணலைத் தவிர்த்து விட்டு இதை சட்டம் சார்ந்து மட்டும் காண முடியுமா? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக நாடாளுமன்ற மக்களவையில் தனக்குள்ள பலத்தை சாதகமாக்கி எதிர்க்கட்சிகளின் ,எந்த மாற்றுக் கருத்துக்கும் செவிசாய்க்க மறுத்து தானடித்த மூப்பாய் குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது. ஜனநாயக நெறிமுறைகள் படி அனைத்து மக்களின் கருத்துகளையும் கேட்க தயாரில்லை என்பதையே இது காட்டுகிறது. மாநிலங்களவையில் இல்லாத பலத்தை தமிழக ஆளுங்கட்சி ஆதரவில் இட்டு நிரப்பியபடி, குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் அவசர அவசரமாய்ப் பெற்றது. இந்த மசோதா தாக்கல் செய்த போதே இன்றைய காஷ்மீர் கண்முன் வர சட்டத்தின் அபாயத்தை உணர முடிந்தது. அகதிகளாக வந்தவர்கள், சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் பற்றிய தெளிவைத் தர மறுக்கும் இச்சட்டம் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கான குடியுரிமை பற்றி மதரீதியாக தருவதாக இஸ்லாம் தவிர்த்து, மற்ற மதங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அறிவித்தது.இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை அகதிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கும் குடியுரிமை இல்லாமல் போகுமோ என்று எழும் அச்சம் இயல்பு தானே !
இந்த நாட்டில் பிறந்த மக்களுக்கு பாதிப்பில்லை என்று பிரதமரும் , உள்துறை அமைச்சரும், இன்னபிற மத்திய ஆளுங்கட்சிப் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்திற்கு வெளியே மேடைகளில் சொல்கின்றனர். இதேபோல் மாநிலங்களவையில் அந்த சட்டம் நிறைவேற ஆதரவாக வாக்களித்த பின் தமிழக மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் அதனால் எந்த பாதிப்பும் வராது என்று தமிழக முதல்வர் சொல்வதை ஏற்க முடியுமா? எந்த ஒரு விசயமும் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப் பட்டபின் அதை அரசு ரத்து செய்யாமல் இருக்கும் போது அதன் விளைவுகள் மக்களை பாதிக்காமல் இருக்குமா? அது சாத்தியமா? இந்தக் கேள்வியைத் தான் நாடு முழுவதும் பரவலாக நடந்து வரும் மக்களின் போராட்டங்கள் எழுப்பி வருகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பலமுறை நடந்துள்ளது. அதைப் பற்றிய அச்சமோ கேள்விகளோ மக்களிடம் இருந்ததில்லை. ஆனால் இன்று அதில் சேர்க்கப்பட்டுள்ள இரு கேள்விகள் ஆவண சாட்சியங்களுடன் பதில் தர இயலாத சூழலை உருவாக்கும் போது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சாதாரண ஏழை எளிய மக்கள் மற்றும் பிழைப்பிற்காக பல பகுதிகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர் என அனைத்து தரப்பு மக்களும் அச்சப்படுவதை தவிர்க்க இயலுமா?
மக்கள் தொகை கணக்கெடுப்பு குடியுரிமை சட்டத்துடன் இணைக்கப் பட்ட அஸ்ஸாம் மாநில அனுபவத்தை, அதற்கான விசேஷ சூழல் எனும் புரிதலுடன் பார்த்தால் கூட முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பம் உள்ளிட்ட லட்சக் கணக்கான மக்களின் குடியுரிமை பறிபோயிருப்பதும், அதில் ஒரு பெண்மணி தனது குடியுரிமையை நிலைநிறுத்த நீதிமன்றத்தில் எட்டு ஆவணங்களை தாக்கல் செய்தும் முடியவில்லை எனும் செய்தியைக் காணும் போதும் இந்த அச்சம் அதிகரிப்பது இயல்பு தானே! உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் பிரச்சனையில் நமது மத்திய அரசு குறிப்பிட்ட பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து இந்து மதம் சார்ந்த மக்கள் இந்தியாவிற்கு வர விரும்பாத நிலை பற்றிய செய்திகளை அறியும் போது அரசால் நாடாளுமன்றத்தில் கூறப்படும் விசயங்கள் கூட நம்ப இயலாத கேள்விக்குறி ஆகின்றதே! அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தன்னை எதிர்மனுதாரராக சேர்த்துக் கொள்ள கேட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் இந்தியராக அனைத்து மக்களையும் கவலை கொள்ளச் செய்கிறது.
இந்தப் பின்னணியில் 70 நாட்களாக தில்லி ஷாகின்பாதில் மிக அமைதியாக அறவழியில் போராடி வந்த இஸ்லாமிய மக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை நிகழ்த்த அச்சாரமாக, காவல் அதிகாரியை அருகில் வைத்துக் கொண்டே வன்முறையைத் தூண்டும் வகையில் ஒருவரால் பேச முடிகிறது. அதன் தொடர்ச்சியாக ஐம்பது உயிர்கள் வரை காவு வாங்கப் படுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள்,வாகனங்களை இடிக்க, எரிக்க,முடிகிறது. உயிருக்குப் போராடும் நிலையில் நூற்றுக்கணக்கான மக்களை காயப்படுத்த முடிகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்களே வன்முறை நடக்க காரணமானவருக்கு பாதுகாப்பை வழங்க முடிகிறது.
இந்நிலையில், இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தமிழகம் உட்பட அனைத்து இடங்களிலும் பரவலாக சட்ட ஆதரவு எனும் முறையில் போராட்டங்களை நடத்துகின்றன. பயங்கரவாதிகளை நாட்டை விட்டு வெளியேற்று என்று இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தொழில் நகரமான திருப்பூரில் போக்குவரத்து மிகுந்த இடத்தில் அங்கப் பிரதட்சணப் போராட்டத்தை குடியுரிமை சட்ட ஆதரவுப் போராட்டத்துடன் இணைத்து நடத்திய செய்திகளைப் பார்க்க நேர்ந்தது. இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தும் விதத்தில் விசம் கக்கும் கருத்துகள் பேசப்படுகின்றன .வண்ணாரப்பேட்டை போன்று தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் இடங்கள் தில்லி போலாகும் என அச்சுறுத்தப் படுகின்றன .
இந்நிலையில் மத்திய ஆளும் கட்சியான பிஜேபி அதிக நன்கொடை பெற்று இந்தியாவின் முதல் இடத்தில் இருப்பதையும், அதன் தலைவர்களின் பேச்சுகளையும்,சங்பரிவாரின் சாகாக்கள் ஊர்வலங்கள் நடத்தப்படுவதையும் தில்லி வன்முறை போன்ற சம்பவங்களையும் பிரித்துப் பார்க்க இயலுமா ? எனவே வெறும் சட்டத் திருத்தங்கள் மட்டும் மக்களின் வாழ்வையோ அவர்களின் எண்ணப்போக்கையோ செயல்களையோ தீர்மானிக்காது. ஜனநாயக விழுமியங்களைக் காக்கும் வகையில் அறம் செய்ய விரும்பி, நீதித்துறை மற்றும் சட்டத்தின் அறங்களும், நிர்வாகம் மற்றும் ஊடகங்களின் அறமும் காக்கப்பட்டால் தான் மக்களின் அறம் சார்ந்த மனநிலையைப் பாதுகாக்க முடியும். மத்திய மாநில அரசுகள் மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதே நல்லாட்சியின் அடையாளமாகும். இதை மோடி தலைமையிலான பாஜக அரசிடம் எதிர்பார்க்கமுடியுமா?