tamilnadu

img

இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் தூண்டுதலால் போலீஸ் திடீர் அனுமதி மறுப்பு: பட்டா கேட்டு கோவில் நிலங்களில் குடியிருப்போர் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தை முற்றுகை

அரியலூர், செப்.25-  கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்டோர் புதனன்று முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னரே அனுமதி பெற்றிருந்தும் இந்து முன்னணி,ஆர்எஸ்எஸ் நிர்ப்பந்தத்தால் போலீஸ் செவ்வாயன்று இரவு திடீரென அனுமதி மறுத்தது.ஆனால் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் பல தலைமுறையாக கோவில் நிலங்களில் பல தரப்பட்ட சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர். சிறுகடை வைத்துள்ளவர்கள்,சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அந்த இடத்தினை பட்டா செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் மற்றும் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் புதனன்று நடைபெற்றது.  போராட்டத்திற்கு திடீரென அனுமதி மறுத்து போலீஸ் டிஎஸ்பி மோகன்தாஸ்,காவல் ஆய்வாளர் ராஜ்மோகன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  போராட்டத்திற்கு செல்லக்கூடாது என இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ்காரர்கள் மிரட்டியுள்ளனர். இவர்களின் மிரட்டலையும் மீறி கோவில் நிலங்களில் குடியிருக்கும் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அனுமதி மறுத்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பின்னர் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் டி.தியாகராஜன் தலைமை வகித்தார். அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட சூழலில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் அந்த இடத்தினை பட்டா செய்து தர அரசு ஆணை உள்ளது. அதனடிப்படையில் உடனடியாக தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகாராஜன், மாவட்டப் பொருளாளர் ஆர்.இளவரசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி, ஒன்றியச் செயலாளர் டி.அம்பிகா ஆகியோர் உரையாற்றினர். பின்னர் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஜெயங்கொண்டம் தலைமை துணை வட்டாட்சியரிடம் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் வழங்கப்பட்டது. அம்மனுவில், குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.குடியிருக்க இடமே இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுடன் கூடிய இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக கோவில் நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் அனைவருக்கும் அரசு செலவில் பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.