முதலில் புக்காரின் எழுதிய வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நூல் அனைவராலும் சேர்ந்து வாசிக்கப்பட்டது. பின்னர் மாஸ்கோ உரையாடல் என்ற ஜூலியஸ் ஹெகருடைய நூல் படிக்கப்பட்டது. அதன்பின் பிளெக்கனோவ் எழுதிய மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் படிக்கப்பட்டது. அதன்பின் அரசியல் பொருளாதாரத்தின் சுருக்கம் என்ற நூல் வாசிக்கப்பட்டது. அதன்பின் காரல் மார்க்சின் மூலதனம் நூல் படிக்கப்பட்டது. இந்நூலை ஏற்கெனவேயே சிறையில் நன்கு படித்திருந்த டாக்டர் நாராயண் ராய், தினமும் அதை விளக்கிக் கூறினார். இந்த வகுப்பு மட்டும் 6 மாதங்கள் தொடர்ந்தது.
நீங்கள் விடுதலையாகி வெளியே சென்றால் கட்சி வேலையில் மூழ்கி விடுவீர்கள். மூலதனத்தைப் படிக்க நேரம் கிடைக்காது. இப்பொழுது ஏராளமான நேரம் உள்ளது. அதை இப்பொழுதே படிப்பது நல்லது என்று டாக்டர் நாராயண்ராய் இதர தோழர்களை அடிக்கடி வலியுறுத்துவார். இந்த ஏழு பேர் கொண்ட குழு தொடர்ந்து மார்க்சிய நூல்களைப் படித்து விவாதித்து வந்ததைக் கண்ட சக அந்தமான் கைதிகள் ஒருவர்பின் ஒருவராக டாக்டர் நாராயண் ராயைத் தேடிவந்து தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க ஆரம்பித்தனர். அவரும் சளைக்காமல் அவர்களுக்குப் பதில் சொல்வதோடு அவர்களுக்கு மார்க்சிய நூல்களைக் கொடுத்து படிக்க வைத்தார். இவ்வாறு நூற்றுக்கணக்கான அந்தமான் கைதிகள் மார்க்சிய தாக்கத்துக்கு ஆளாகி கம்யூனிஸ்டுகள் ஆகினர்.
அடுத்து ஸ்டாலின் எழுதிய ‘லெனினியம்’ என்ற புத்தகம் கூட்டாக படிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ‘லெனினுடைய பொருள்முதல்வாதமும் அனுபவ வாத விமர்சனமும்’ என்ற நூல் படிக்கப்பட்டது. விரைவில் டாக்டர் நாராயண் ராய் கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு என்ற குழுவை (Communist Consolidation Gruop)உருவாக்கினார். இவ்வாறு கம்யூனிஸ்ட் ஆக்கப்பட்ட அந்தமான் கைதிகளில் பலர் விடுதலையானபின் பின்னாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர்களாக விளங்கினர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். அவர்களில் லாகூர் சதி வழக்கு கைதிகளும் பகத்சிங்கின் சக தோழர்களுமான பூதகேஸ்வர் தத், சிவவர்மா, ஜெய்தேவ் கபூர், விஜய் சின்ஹா, சுதின்ராய், அமிர்தேந்து முகர்ஜி, பிரான் கிருஷ்ண சக்ரவர்த்தி, கணேஷ் கோஷ், சதீஷ் பக்ராஷி மற்றும் சுபோத்ராய் ஆகியோராவர். சிவவர்மா பின்னாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில செயற்குழு உறுப்பினராகவும் பிரான் கிருஷ்ண சக்ரவர்த்தி மேற்குவங்க அகதிகள் சங்கத் தலைவலாகவும் அமிர்தேந்த் முகர்ஜி மேற்குவங்க இடதுமுன்னணி அமைச்சராகவும், சுபோத்ராய் சிறந்த மார்க்சிய ஆய்வாளராகவும் விளங்கினர். ‘இந்தியாவில் கம்யூனிசம்’ என்ற தலைப்பில் இந்தியாவில் கம்யூனிசம் குறித்து மூன்று ஆவணங்களை சுபோத்ராய் வெளியிட்டுள்ளார். சதீஸ் பக்ராஷி மொத்தத்தில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். கணேஷ் கோஷ் 28 ஆண்டுகள் கொடிய சிறைவாசம் அனுபவித்துள்ளார். இவர்கள் இருவரும் மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களாக விளங்கினர். பின்னாட்களில் கணேஷ் கோஷ் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்டுகள் கொடிய சிறைவாழ்க்கையையும் கல்விச் சாலையாக மாற்றும் திறன் படைத்தவர்கள் என்பதற்கு அந்தமான் தீவுச்சிறை ஒரு உதாரணமாகும்.