tamilnadu

குடிநீர் கேட்டு சாலை மறியல்

வேலூர், ஜூன் 5-வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தை சேர்ந்தது மங்கலம் ஊராட்சி. இங்குள்ள மேட்டு மங்கலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை . இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து சென்று விவசாயக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து மேட்டு மங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மங்கலம் ஊராட்சி செயலாளரிடமும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் கோரிக்கை மனு அளித்து உள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பாணாவரத்தில் இருந்து காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் பாணாவரம் காவல் ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், காவல்துறையினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து காவல்துறையினர், பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.