tamilnadu

img

தோழர் கே.டேவிட் - இறுதி மூச்சு வரை எழுத்துப் பணியும் - சங்க செயல்பாடும்

இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் கே.டேவிட் பிப்ரவரி 18, 2024 இரவு மறைவெய்திவிட்டார். நாசரேத் பகுதியைச் சேர்ந்த டேவிட் மதுரையில்  எல்.ஐ.சி அலுவலகப் பணியில் சேர்ந்தார். தொழிற்சங்கப் பணியிலும் ஈர்க்கப்பட்டார். எமர்ஜென்சி, நிர்வாகத்தின் அடக்குமுறைகள்  உள்ளிட்ட சோதனை மிக்க காலம் அது. சங்கத்திற் குள்ளும் பல்வேறு அரசியல் கருத்தோட்டங்கள் மோதிக் கொண்டு பிளவு வரை கூட சென்ற நேரம் அது. இந்தியாவின் எல்லா மையங்களிலும் உறுதி மிக்க, எல்லோரையும் அரவணைத்தும் செல்கின்ற தலைமை தேவைப்பட்ட நேரம். இயல்பாகவே தோழர் கே.டேவிட் 1970 களிலும், 1980 களின் முற்பகுதியிலும் சங்கத்தின் பிரதான பொறுப்புகளில் இருந்து செயலாற்ற வேண்டி வந்தது. அன்றைய தலைவர்கள் ஆர்.கிருஷ்ணன், எஸ்.தண்டபாணி, நாராயணசிங் ஆகியோருடன் இணைந்து அத்தகைய சவாலை சந்தித்து சங்கத்தின் ஒற்றுமையை உறுதி செய்தவர் டேவிட். இவரிடமிருந்து இ.எம்.ஜோசப் பொறுப்புகளை ஏற்கிற 1983 வரை மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் ஆக இருந்தார்.

தொழிற் சங்கப் பணிகளில் இவரின் எழுத்துப் பணியும் குறிப்பிடத்தக்கது. இவரது வரைவுகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் வேறு யாரும் எளிதில் கைவைக்க முடியாததாக இருக்கும். சொல் தேர்வும், இலக்கணப் பிழையின்றி எழுதுவதும் எல்லோரையும் வியக்க வைக்கும். தொழிற்சங்கத் தலைவர்கள் அலுவலகப் பணிக் கலாச்சாரமும் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்பது இவரின் அழுத்தமான கருத்து. அலுவலகப் பணி ஓய்வு வரை அதை நிரூபித்தும் காட்டினார். மதுரை ரயில்வே ஆயிரக்கணக்கான பாலிசிதாரர்களைக் கொண்ட சம்பளப் பிரிமிய பிடித்தத்தில் இருந்தது. அதன் ஆவணமாக்கலில் பெரும் இடைவெளிகள், பிரச்சனைகள் ஏற்பட்ட போது மதுரை எல்.ஐ.சி கோட்ட முதன்மை மேலாளர் இவரை அழைத்து நீங்களே சரி செய்து தர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்த போது ஏற்றுக் கொண்டு அப்பணியை முடித்தும் தந்தார். இப் பணி உயர் அதிகாரிகள் மத்தியில் பல ஆண்டுகளுக்கு பேசு பொருள் ஆனது. எல்.ஐ.சி யின் அறிவிக்கப்படாத சேவை மையமாக திகழ்ந்தார்.  மனித உறவுகளை பேணுவதில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். பலரின் இல்லங்களுக்கு செல்வார். அவர்கள் ஏதேனும் பிரச்சனைகள் கூறினால் அதற்கு தீர்வு காண பல மணி நேரம் செலவழிப்பார். அலைவார். பல நாள் மண்டல அலுவலகத்திற்கு வரும் போது 80 வயதைக் கடந்த பின்னரும் மயிலாப்பூர் போய் அங்குள்ள பேக்கரியில் “பிளம் கேக்” ருசியாக இருக்குமென்று வாங்கி வந்து தருவார். எதிலுமே இயந்திர கதியாக இருப்பது அவரின் இயல்பு அல்ல.

1970 களில் மதுரை நகரில் அனைத்து சங்க ஒருங்கிணைப்பை உருவாக்குவதில் இவர் பணி குறிப்பிடத் தக்கது. மதுரை பல்கலை. ஆசிரியர் சங்கம் உருவான காலத்தில் இவர் தந்த ஒத்துழைப்பும், வழி காட்டல்களும் இன்றுவரை நினைவு கூரப்படுகிறது. மதுரை மேல மாசி வீதியில் அமைந்திருந்த எல்.ஐ.சி ஊழியர் சங்க அலுவலகம் எல்லா நடுத்தர ஊழியர் அமைப்புகளுக்குமான மையமாக மாறியது. சங்கத்தின் பிரதான பொறுப்புகளில் இருந்து இளையவர்களுக்காக தன்னை விடுவித்துக் கொண்ட அவர் இடதுசாரி இயக்கத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். “தீக்கதிர்” நாளிதழின் ஆசிரியர் குழுவுக்கு உதவும் பணியை ஏற்றுக் கொண்டார். அலுவலகம் முடிந்தவுடன் மதுரை பைபாஸ் ரோடு தீக்கதிர் அலுவலகம் சென்று விடுவார். இவருடன் இன்சூரன்ஸ் அரங்கத்தை சேர்ந்த சியாமளம் (காஸ்யபன்), அருள்தாஸ் ஆகியோரும் இணைந்து ஆசிரியர் குழுவின் பணிச் சுமையை பெருமளவு பகிர்ந்து கொண்டனர்.

அலுவலகப் பணி ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஆங்கில இதழான “இன்சூரன்ஸ் ஒர்க்கர்” பணிக்கு வருமாறு அன்றைய தலைவர்கள் என்.எம்.சுந்தரம், ஆர்.கோவிந்தராஜன், ராஜப்பா ஆகியோர் கேட்டுக் கொண்ட போது “தீக்கதிர்” மனமில்லாமல் விடுவித்தது. “இன்சூரன்ஸ் ஒர்க்கர்” அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. எழுத்துப் பிழைகள் மட்டுமின்றி கருத்துப் பிழைகளும் இல்லாமல் வருவதில் அவர் சமரசம் செய்யவே மாட்டார். சென்னை அண்ணா சாலை “பாரத் இன்சூரன்ஸ் கட்டிடத்தில்” இரவு நெடு நேரம் வரை அமர்ந்து வேலையை முடிப்பார். “இன்சூரன்ஸ் ஒர்க்கர்” இதழ் தலைமையகம் பெங்களூருக்கு சென்ற பின்னரும் அவர் சென்னை நிகழ்வுகளை தொகுத்து அனுப்புவார். ஓராண்டாக அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அதுவரை அவரின் எழுத்துப் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த அர்ப்பணிப்பும், ஆற்றலும் என்றென்றும் உங்கள் பெயரைப் பேசும் தோழர் டேவிட் அவர்களே!

செவ்வணக்கம் தோழர் டேவிட்!
 

- க.சுவாமிநாதன்