ரயில்வே கோட்ட உதவி பொறியாளரை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கேங் தொழிலாளி மீது பொய் குற்ற அறிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜுன் 21- திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் கடந்த 1.12.2023 அன்று தஞ்சையில் நடைபெற்ற பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் நீண்டநாள் கோரிக்கைகளை அதிகாரிகளின் முன்னிலையில் ஒரு கேங் தொழிலாளி எழுப்பியதற்காக, கடும் கோபம் கொண்ட கோட்ட உதவி பொறியாளர், பழி வாங்கும் நோக்கத்தோடு, அந்த கேங் தொழிலாளியின் ஆண்டு செயல்பாட்டு அறிக்கையில் சராசரிக்கும் குறைவான தரம் என்று எழுதிக் கொடுத்துள்ளார். மேலும், பொய்யான குற்றச்சாட்டு அறிக்கை கொடுத்தும், 36 மாதம் இன்கிரிமென்ட்டை குறைத்தும், அந்த தொழிலாளியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கோட்ட உதவி பொறியாளரை கண்டித்தும், கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கையை ரத்து செய்யவும், சராசரிக்கும் குறைவான தரம் என்று எழுதிக் கொடுத்ததை திரும்பப்பெறவும் வலியுறுத்தியும், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) சார்பில் வெள்ளியன்று கோட்ட உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கோட்ட உதவி தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். கோட்டத் தலைவர் சிவக்குமார், கோட்டச் செயலாளர் கரிகாலன், உதவி பொதுச் செயலாளர்கள் ராஜா, உதவி கோட்டச் செயலாளர்கள் அழகிரி, ரஜினி, செந்தில், டிஆர்பியு மண்டலத் தலைவர் சாம்பசிவன், தஞ்சை கிளை சந்திரோதயம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், கோட்ட கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோட்ட பொருளாளர் லெட்சுமிபதி நன்றி கூறினார்.