tamilnadu

img

கருணாநிதியின் உருவச் சிலையை வெங்கைய நாயுடு திறந்து வைத்தார்

 முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவச் சிலையை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு திறந்து வைத்தார். அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி.,

சென்னை, மே 28- சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய நாயுடு சனிக்கிழமை (மே 28) திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த மாதம் அறிவித்தார். அந்த அறிவிப்புடன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 1.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 16 அடி உயரத்தில் கருணாநிதியின் வெண்கலச் சிலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கைய நாயுடு திறந்து வைத்தார். பின்னர் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கருணாநிதியின் அரசியல் ஆளுமை குறித்து வெங்கையா நாயுடு நினைவு கூர்ந்தார். நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.