tamilnadu

img

ரூ.1691.17 கோடி வருவாய் ஈட்டிய பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மூட முயற்சி

பாலக்காடு, மே 11- பயணிகள் கட்டண வருவாயைக் காரணம் காட்டி இந்திய ரயில்வே, பாலக்காடு கோட்டத்தை மூட முயற்சி மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் பயணிகள் கட்டணம் உள்ளிட்ட பிற வருவாய்கள் மூலம் 1691.17 கோடிகளை இக்கோட்டம் ஈட்டியது. சரக்குக் கையாளுதலில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய போதிலும் கேரளத்தின் மீது ஒன்றிய பாஜக அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது. மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது பயணச் சீட்டு வருவாய் ரூ.115 கோடிகள் குறைவாக இருந்தாலும், பட்ஜெட் இலக்குகள் உட்பட சரக்கு மூலம் வருவாயை நிர்வகிப்பதில் இந்த கோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலக்காடு கோட்டத்தில் வருவாய் விவரம்:  ரயில் பயணச் சீட்டு ரூ.964.19 கோடி, சிறப்பு ரயில், சினிமா, நடைமேடை சீட்டு ரூ.65.96 கோடி, சரக்கு ரூ.481.36 கோடி, விளம்பரம், பார்சல் சேவை, பார்க்கிங் கட்டணம் ரூ.64.66 கோடி. தொடர் புறக்கணிப்பு கடந்த பத்து ஆண்டுகளாக நிறுத்தங்களை குறைத்தும், புதிய ரயில்களை அனுமதிக்காமலும் கேரளத்தின் ரயில் போக்குவரத்தை ஒன்றிய பாஜக அரசு புறக்கணித்து வருகிறது. பாலக்காடு - பொள்ளாச்சி பாதை சீரமைப்பு பணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், ரயில்களை இயக்காததால் பயணிகள் வருகையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பாலக்காடு- சென்னை அதிவிரைவு ரயில், அமிர்தா விரைவு ரயில் மற்றும் திருச்செந்தூர் விரைவு ரயில் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. அதே பாதையில் 58 நிறுத்தங்கள் புறக்கணிக்கப்பட்டன.  பி.ஆர்.நடராஜன் கோரிக்கை திருச்செந்தூர் விரைவு ரயில் மட்டுமே பெரும்பாலான ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று சிபிஎம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 1956 ஆகஸ்ட் 31 அன்று, போத்தனூர் கோட்டம் கலைக்கப்பட்டு, ஒலவக்கோடு ரயில்வே கோட்டம் என்ற பெயரில் பாலக்காடு ஐந்தாவது கோட்டமாக உருவாக்கப்பட்டது. 1247 கி.மீ. நீள பாதை இந்த கோட்டத்தில் இருந்தது. 2007 இல் சேலம் கோட்டம் உருவானவுடன், பாலக்காடு கோட்டம் தனது பாதையில் பாதிக்கு மேல் இழந்தது. தற்போது, 588 கி.மீ., பாதைகள் மட்டுமே இந்த கோட்டத்தின் மேற்பார்வையில் உள்ளன. அதை கவனத்தில் கொள்ளாமல் பாலக்காடு கோட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கை ஓரவஞ்சனை எனவும் அதைக் கைவிட வேண்டும் எனவும் பயணிகள் கூறுகின்றனர்.