சிவகங்கை, ஏப்.23- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடியில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் கூடுதலாக வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு முதன்மைச் செயலாளர் (சிறப்பு செயலாக்க திட்டம்) உதயசந்திரன் தெரிவித்தார். சங்ககால தமிழர்கள் நகர நாகரிகத்துடன் 2,600 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வாழ்ந்துள்ளனர் என்பதை உலகளவில் அறியப்படுத்துகின்ற வகையிலும், தமிழர்களின் புகழை பறைசாற்றுகின்ற வகையிலும் கீழடியில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.அவற்றை மக்கள் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை அரசு முதன்மைச் செயலாளர் (சிறப்பு செயலாக்க திட்டம்) உதயசந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஏப்ரல் 23 ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் உதயசந்திரன் கூறுகையில், இந்த அருங்காட்சியத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு, அரசின் அறிவுரையின்படி சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்களுடன் இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்களின் வசதிக்காக நுழைவுச்சீட்டு பெறுவதற்கு வலைத்தளம் வழியாக பணம் செலுத்தும் முறைகள், சுற்றுலா பயணிகளின் பொருட்களை பாதுகாப்பதற்கென பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்துவதற்கும், அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ள பொருட்களில்; மாதிரி வடிவ பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான தெளிவான குறிப்புகளை நிறுவுவதற்கும் மற்றும் அருங்காட்சியத்தினுள் உள்ள அனைத்து பிரிவுகள் குறித்தும் வழித்தடங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நிறுவுவதற்கும், கூடுதலாக காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று குறிப்புகளை தெளிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கென துறைசார்ந்து கூடுதலாக வழிகாட்டிகளை நியமிப்பதற்கும், இதற்கென தொல்லியல் துறையில் ஆர்வத்தின் அடிப்படையில் இப்பகுதிகளை சார்நத்வர்களை வழிகாட்டிகளாக நியமனம் செய்து அதற்கென முறையான பயிற்சிகளை அவர்களுக்கு அளித்திடவும், வார இறுதிநாட்களில் தற்போதுள்ள நேரத்தை கூடுதலாக 1 மணிநேரம் மாலைவேளையில் அதிகரித்திடவும், பொதுமக்களின் வருகையை பொறுத்து குறும்படங்களை தொடர்ந்து திரையிடவும், கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்திடவும், அருங்காட்சியகத்தினுள்ள ஒவ்வொரு பிரிவிலும் அவைகள் சார்ந்த புத்தகங்களை நிறுவுவதற்கும் மற்றும் மகளிர்சுய உதவிக்குழுக்களின் சார்பில் இயங்கி வரும் சிற்றுண்டி உணவகத்தின் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை தரமான முறையில் பொது மக்களுக்கு வழங்கிடவும், அதற்கான விலைப்பட்டியலினை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் காட்சிபடுத்துவதற்கும் என இதுபோன்று பல்வேறு கூடுதல் வசதிகளை மேம்படுத்த துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தொல்லியியல் துறை ஆணையர் (மு.கூ.பொ) ஆர்.சிவானந்தம், கீழடி கட்டட மையம் (ம) பாதுகாப்பு கோட்டம், (சென்னை) முதன்மை பொறியாளர் இரா.விஸ்வநாத், தலைமை பொறியாளர்(மதுரை மண்டலம்) சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் (சென்னை) எஸ்.மணிகண்டன,; உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.