“சாதியின் தீய விளைவுகள் பற்றி நான் இங்கு விவரித்ததை கேட்டு உங்களில் சிலர் சலிப்படைந் திருந்தால் அதில் வியப்பேதுமில்லை. அதில் புதிதாகவும் ஒன்றுமில்லை. எனவே, பிரச்சனையின் ஆக்கப்பூர்வமான பகுதியைப் பற்றி இப்போது பேசத் தொடங்குகிறேன். சாதி கூடாது என்றால் உங்களுடைய லட்சிய சமூகம் எப்படிப்பட்டது என்ற கேள்வி நிச்சயம் எழும். என்னுடைய லட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு ஏன் இருக்கக் கூடாது.” - டாக்டர் அம்பேத்கர்.
நாடு விடுதலையடைந்து முக்கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. குறைந்தபட்சம் சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம் என்ற அம்சங்களையா வது நாம் அடைய முடிந்துள்ளதா? இல்லை. இந்திய ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கை ஒருபுற மும், உழைக்கும் வர்க்க ஒற்றுமையை சிதைக்க அவை கட்டிக்காத்து வரும் சாதி, மத அமைப்புகள் மறுபுறமுமாகச் சேர்ந்து மேற்கண்ட மூன்று லட்சியங்களும் இன்றள வும் கனவுகளாகவே நீடிக்கின்றன. பொருளாதார அமைப்பு பற்றி தனியாக பரிசீலிக்கலாம். இந்தியாவின் சாதியமைப்பு ஏற்படுத்திய கேடுகள் கொஞ்சமா? அடித்தட்டு மக்களின் சுதந்திரத்தையும், சமூக சமத்துவத்தையும் அது பறித்துவிட்டது என்பது மட்டுமல்ல, சகோதரத்துவத்தையும் கூட படுகொலை செய்து வருகிறது என்ப தற்கு மறுப்பேதும் இருக்க முடியுமா?. தமிழகத்தில் 1990களில் நடைபெற்ற சாதிய மோதல்கள் குறித்து ஏற்கனவே விவரித் துள்ளோம். இம்மோதல்களால் மிகக் கடுமை யாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ராம நாதபுரம் மாவட்டமும் ஒன்று. இவ்வாறு மோதல்கள் ஏற்பட்ட காலத்தில், அமைதி யையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தவும், கொடூரமாகப் பாதிக்கப்பட்ட தலித் மக்களை பாதுகாக்கவும் அங்கு சிபிஐ(எம்) வகித்த பாத்திரம் குறிப்பிடத்தக்கதாகும். * 1998 அக்டோபர் 4இல் ஒரு சாதி அமைப் பின் மாநாடு இராமநாதபுரத்தில் நடை பெற்றது.
இம்மாநாட்டில் சாதிவெறி முழக்கங்கள் வலுவாக எழுப்பப்பட்டன. இதோடு மிகவும் கேடுவிளைவிக்கும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களில் ஒன்று தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமென்பதாகும். இம்மாநாட்டிற்கு வந்தவர்களில் ஒரு பகுதியினர் வேந்தோணி என்ற கிராமத்திற் குள் நுழைந்து சரஸ்வதி நகர் என்ற பகுதி யில் வீரன் சுந்தரலிங்கம் பற்றி எழுதப்பட்டி ருந்த ஒரு பெரிய தட்டிப்போர்டை அடித்து நொறுக்கினர். பிறகு தலித் குடியிருப்புக்குள் நுழைந்து ஏராளமான வீடுகளை சேதப்ப படுத்தினர். அங்கு ஒரு முதியவர் படுகொலை செய்யப்பட்டார். இதோடு தாக்குதல் நிற்க வில்லை. மஞ்சூர், சத்திரக்குடி என வேறு சில கிராமங்களுக்குள்ளும் நுழைந்து தலித் மக்களையும் அவர்களது உடமை களையும் அடித்து நொறுக்கினர். தலித் மக்கள் தாக்கப்பட்ட சம்பவமும், சரஸ்வதி நகரில் ஒரு முதியவர் படுகொலை செய்யப்பட்டதுமான நிகழ்வுகள் தலித் மக் களை ஆத்திரமடையவும், அணி திரளவும் வைத்தது. மாவட்டம் முழுவதும் இதை யொட்டி பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதற்கு மத்தியில் சாதிய மாநாட்டில் அணி திரண்டவர்களை அவர்கள் திரும்பும் வழியில் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களால் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. பரவலாக பல ஊர் களுக்குள் நுழைந்தனர். இதையொட்டி பதற்றமும், கலவரச் சூழலும் மேலும் அதிகரித் தது. இக்காலத்தில் உருவான வன்முறைச் சம்பவங்களில் 12 பேர் படுகொலை செய்யப் பட்டனர். இவர்களில் 6 பேர் தலித்துகள். 5 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வர்கள். இதில் மிகுந்த துயரம் என்னவென்றால் மோதல் நடத்திய இரு பிரிவினருமே பொரு ளாதார ரீதியாக மிக பின்தங்கிய ஏழை, எளிய பிரிவைச் சார்ந்தவர்கள். உழைக்கும் வர்க்கத்தின் அங்கமாக இருப்பவர்கள். தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்காக ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டியவர்கள். கேடுகெட்ட சாதி அமைப்பு இவர்களை மோத வைத்து இரு தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டது. இச்சம்பவம் உருவாக்கிய அதிர்ச்சி தமிழகத்தை உலுக்கிய ஒரு நிகழ்வாகும்.
இருதரப்பு மக்களிடையேயும் சமூக விரோத சக்திகள் வதந்திகளைப் பரப்பினர். கலவரச் சூழலை வலுப்படுத்தினர். பல அரசி யல் இயக்கங்கள் செய்வதறியாது திகைத்து நின்றன. இந்நிலையில் சிபிஐ(எம்) களத்தில் இறங்கியது. உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை முன்னின்று நடத்தியது. இதில், சிபிஐ, திமுக, தமாகா உள்ளிட்ட கட்சி கள் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் அமைதியையும், ஒற்றுமையையும் நிலை நாட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதோடு இக்கட்சிகளின் தலைவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து உட னடியாக அமைதியையும், இணக்கத்தை யும் ஏற்படுத்த உறுதியான முறையில் தலை யிடுமாறு வேண்டுகோள் விடுத்தன. மாவட்ட அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதன் காரணமாக பதற்றம் தணிந்து அமைதி ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, இக்காலத்தில் சிபிஐ(எம்) சார்பாக கட்சி அணிகள் சுயேச்சையான பிரச்சார இயக்கத்தை வலுவாக நடத்தின. கட்சி அணிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் 1998 அக்டோபர் 25, 26 தேதிகளில் நடைபயணம் மேற்கொண்டன. இந்த பயணக்குழுக்கள் அனைத்தும் இறுதியாக இராமநாதபுரத்தில் ஒன்று சேர்ந்தன. அங்கு சிறப்பான பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் என்.வரதராஜன், பி.சம்பத், என். நன்மாறன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதோடு, பி.சம்பத், டி.மணி எம்.எல்.ஏ., என்.நன்மாறன் மற்றும் மாவட்டத் தலைவர்கள் எம்.கருப்புராஜா, வெங்கடேஷ், இரா.ஞானவாசகம், வி.காசிநாததுரை, கோவிந்தசாமி, நா.கலையரசன், ஆர்.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
குறிப்பாக, சேதமடைந்த தலித் மக்கள் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு நம்பிக்கையையும், தைரியமும் அளித்தனர். * சாதிய சக்திகள் சிறு பிரச்சனைகளையும் பெரும் மோதலாக்கி விடுகின்றனர். அப்படித்தான் காட்டு பரமக்குடி பகுதியில் கபடி போட்டியில் ஏற்பட்ட சிறு பிரச்சனை பெரும் மோதலாக வெடித்தது. இதில் அம்மாசி என்ற தலித் பெரியவர் சாதிய சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தலித் மக்கள் சாலை மறியல் நடத்தினர். அவர்கள் மீது தேவையற்ற முறையில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி பஞ்சவர்ணம் என்ற தலித் பெண் அதில் பலியானார். இச்சம்பவம் அறிந்தவுடன் என்.வரதராஜன், உ.வாசுகி, பி.மோகன் மற்றும் மாவட்ட தலைவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தலித் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மாவட்ட ஆட்சியர் உள்பட உயர் அதிகாரிகளைச் சந்தித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினர்.
இதன்பிறகு குற்றவாளிகள் பலரும் கைது செய்யப் பட்டதோடு அவர்களுக்கு பின்னர் கடும் தண்டனையும் கிடைத்தது. நம்முடைய தலையீட்டின் பெயரில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கப்பட்டன. * 1995ல் பரமக்குடி தாலுகா, கீழப்பெருங்கரை என்ற கிராமத்தில் தலித் இளைஞர் ஒருவர் வெளிநாடு சென்று பணியாற்றி விட்டு நாடு திரும்பினார். பல ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய அவர் பூட்ஸ் அணிந்தும், பேண்ட் - சர்ட் அணிந்தும் மேல்சாதி தெரு வழியாக தன் குடியிருப்புப் பகுதிக்கு நடந்து சென்றார். டிப்டாப்பாக பூட்ஸ் அணிந்து தங்கள் தெருவில் தலித் இளைஞன் நடந்து செல்வதை கண்டு, ஆத்திரமடைந்த சாதிவெறிக் கும்பல் அவன் மீது கடுமையான தாக்குதல் நடத்தி அடித்து, உதைத்து சித்ரவதை செய்தது. இச்சம்பவத்தை அறிந்தவுடன் தலித் மக்கள் நியாயம் கேட்டு அணி திரண்ட னர். அவ்வாறு அணி திரண்ட தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தி அவர்களின் வீடுகளுக்கு தீ வைத்து உடமைகளையும் சேதப்படுத்தி னர். காவல்துறையோ இதனை கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி தலித் மக்கள் ஊரை காலி செய்துவிட்டு வெளியேறினர். மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்களில் இதுவும் ஒன்று. இச்சம்பவம் அறிந்தவுடன் பி.சம்பத் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் சந்தித்து ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தனர். இதோடு தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பல போராட்டங்களை சிபிஐ(எம்) நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரி 2000 பேர் பங்கேற்ற கண்டன பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் என்.வரத ராஜன், பி.சம்பத், பி.மோகன், ஏ.லாசர் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து தலித் மக்களைத் தாக்கிய சாதிவெறியர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகின. விசாரணை நடைபெற்று குற்றவாளி களுக்கு கடும் தண்டனை கிடைத்தது. சிபிஐ(எம்) எடுத்துக் கொண்ட முயற்சி களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு புதிதாக வீடுகள் கட்டிக்கொடுத்தது. * 2011 செப்டம்பர் 11ல் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அவரது நினைவிடம் நோக்கி பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அணி திரண்டனர். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பழனிக்குமார் என்ற தலித் இளைஞர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச் சோகத்திற்கு மத்தியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இச்சூழலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியது. அவரது கட்சியைச் சேர்ந்த 100 பேர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை லாவகமாக கையாளுவதற்கு பதிலாக காவல்துறையினர் தடியடி நடத்திய தோடு, துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் 6 பேர் மரணமடைந்தனர்.
ஏராளமானோர் காயமடைந்தனர். மறியலில் சம்பந்தப்படாத ஆனால் அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். நிலைமை கடும் பதட்டமானதாக மாறியது. இதையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறையினர் இதோடு விட்டுவைக்க வில்லை. 1000க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்த னர். இவர்களில் ஏராளமானோர் இளைஞர்கள். காவல்துறையின் கைதுக்கு பயந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள இளைஞர்கள் பலரும் காடுகளில் மறைந்து கொண்டனர். அவ்வாறு மறைந்து கொண்ட ஒருவர் பாம்பு கடித்து இறந்தார். அன்றைய அஇஅதிமுக அரசு காவல்துறையின் இத்தகைய அட்டூழியங் களை நியாயப்படுத்தியது. இதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக, ஒரு கண்துடைப்பு விசார ணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு 15.9.2011இல் எம்எல்ஏக்கள் கே.பாலகிருஷ்ணன், அ.சவுந்தரராசன், ஆர்.அண்ணாதுரை, ஆ.லாசர் உள்ளிட்ட தலைவர்கள் நேரிடையாக வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இத்தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கவும் கோரி சிபிஐ(எம்), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடும் காவல்துறை கெடுபிடிகளுக்கு மத்தியில் இப்போராட்டத்தில் 600 பேர் வரை பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் பி.சம்பத், ஏ.லாசர் எம்.எல்.ஏ., கே.சாமுவேல்ராஜ் பங்கேற்றனர். காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு நடைபெற்ற முதல் கண்டன இயக்கம் இது. தமிழக சட்டமன்றத்தில் இத்துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சிபிஐ (எம்), சிபிஐ, புதிய தமிழகம், பாமக ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் சிபிஐ(எம்) வழங்கியது. இக்காலத்தில் சாமுவேல் ராஜ் மாவட்டத் தலைவர்களுடன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நேரடிடை யாக வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியது நம்பிக்கை அளிக்கும் அம்சமாக இருந்தது. அடுத்து, மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பில் துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இதில் சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி உட்பட பங்கேற்று செயல்பட்டன. 2011 அக்டோர் 27ல் பரமக்குடியில் ஒரு பொது விசாரணை இக்குழுவின் சார்பாக நடத்தப்பட்டது. இந்த பொது விசாரணையில் கிடைத்த விபரங்கள் அடிப்படையில் ஒரு விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வில் அதிமுக தவிர இதர அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். காவல்துறையின் அத்துமீறல்கள் இந்த அறிக்கை மூலம் அம்பலப்படுத்தப்பட்டது. காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கே.சாமுவேல்ராஜ் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். இதற்கான வழக்கில் பிரபல வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் பங்கேற்று வாதாடினார். பின்னர் உயர்நீதிமன்றம் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மொத்தத்தில் தென்மாவட்ட கலவரங்களின்போதும், வேறு சில சந்தர்ப்பங்களிலும் ராமநாதபுரம் மாவட்டம் ஒரு கலவர பூமியாகவே மாறியது. 1957 முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து அங்கு சமூகச் சூழல் எப்போதும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. சிறு பிரச்சனை கூட பெரும் மோதலாக மாறும் வாய்ப்பு உள்ளது. இங்கு மோதல்கள் ஏற்பட்ட காலங்களில் அமைதியும் இணக்கமும் திரும்ப இதர பல ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து சிபிஐ(எம்) முக்கியமான பாத்திரம் வகித்தது.