சென்னை,மார்ச் 21- கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி பேசினார். அதன் விவரம் வருமாறு:- காவிரி நடுவர்மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமலும், நமது மாநிலத்தின் கருத்தை கேட்காமலும், ஒன்றிய அரசின் அனு மதியை பெறாமலும், அதிகாரத்தை தானே கையில் எடுத்துக் கொண்டு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு, அணைக் கட்ட முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரி பிரச்சனை என்பது ஒரு நீண்ட காலப் பிரச்சனை. இடைக்காலமாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது இரு மாநிலங்கள் சம்மந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான பிரச்சனை என்பதை கர்நாடக அரசு உணராமல் மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிப்பதை ஒன்றிய அரசு, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து நமது நீர்வளத்துறை அமைச்சர் உணர்வுப்பூர்வமாக கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆதரிக்கிறேன். இந்த பிரச்சனை குறித்து நமது முதல்வர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.