50 சதவிகித மானியத்துடன் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்கல்
பெரம்பலூர், ஜுன் 20- பெரம்பலூர் மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில், 40 பயனாளிகளுக்கு ரூ.11.60 லட்சம் மதிப்பிலான தீவன புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வழங்கினார். தீவனப் பயிர் குறைந்தபட்சம் அரை ஏக்கரில் பயிரிடக்கூடிய, 2 பசுமாடுகள் வளர்க்கின்ற தகுதியான ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு இக்கருவிகள் வழங்கப்படுகிறது. ஒரு புல் நறுக்கும் கருவியின் மதிப்பு ரூ.29,008. இத்தொகையில், 50 சதவீதம் ரூ.14,504 மானியமாக அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கால்நடைகள் வளர்க்கும் 40 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர், ரூ.11,60,320 மதிப்பில் புல் நறுக்கும் கருவிகளை ரூ.5,80,160 அரசு மானியத்தில் வழங்கினர். இக்கருவி மின்விசையால் இயங்கக்கூடியது. இக்கருவி மூலம் தீவனப்புல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு, கால்நடைகளுக்கு வழங்க ஏதுவாக இருக்கும். இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநர் மரு.ஆர்.எஸ்.டி.பாபு, உதவி இயக்குநர்கள் மரு.மூக்கன், மரு.குமார்,கால்நடை உதவி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.