tamilnadu

img

திருமங்கலம் கல்லூரியில் மாணவர்கள் தொடர் போராட்டம்

திருமங்கலம், நவ.19- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள  அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பழம் பெருமை வாய்ந்த மருத்துவக் கல்லூரி யாகும். 1975-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர்  கருணாநிதியால் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூன்றரை ஆண்டு  டிப்ளமோ படிப்பாக கீழ்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது. 1982-ஆம் ஆண்டு கீழ்பாக்கத்தில் இருந்து மதுரை திருமங்கலத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு மூன்றரை ஆண்டாக இருந்த டிப்ளமோ ஹோமியோபதி படிப்பு ஐந்தரை ஆண்டு பட்டப்படிப்பாக மாற்றப்பட்டது. ஆண்டிற்கு 50 மாணவர்கள் இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது 300 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். தென்மாவட்ட மக்கள் ஹோமியோபதி சிகிச்சை பெறுவதற்கு இந்த மருத்துவக் கல்லூரி மிகப் பெரிய உதவியாக உள்ளது. மழைக்காலங்களில் கல்லூரி வளாகத்தில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்கும். இதனால் கட்டடங்களும் பாதிக்கப்பட்டன.  கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக ஆய்வகத்தில் எவ்வித வசதியும் இல்லாத இடத்தில் மாண வர்கள் வகுப்புகளை தொடர்கின்றனர். எனவே  புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என்று மாண வர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தினர்.

விருதுநகரில் படிக்கலாம்: அமைச்சர் உறுதி

இந்த நிலையில் மருத்துவக்கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். விருதுநகர் மருத்துவமனையில் ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். முதுகலை மருத்துவப்படிப்பை இந்தாண்டு தொடங்கவேண்டுமென வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் மூன்றாவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் குறித்து மாணவர்கள் கூறியதாவது:  தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகஸ்ட் 19-ஆம்  தேதி   மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்த போது ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும். அதுவரை விருதுநகர் மருத்துவமனையில் செயல்படும் தாய்  (TAEI) கட்டடத்தின் நான்காவது தளத்தையோ  ஐந்தாவது தளத்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கு உங்களுக்குத் தேவை யான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.  

அப்போது, மாணவர்களிடம் “ஹோமியோ  மருத்துவ மாணவர்கள் கட்டடத்தையும், ஆய்வ கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அலோபதி மருத்துவர்கள் கூட உங்களுக்கு வகுப்புகள் எடுப்பார்கள் என முதன்மையர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. விருதுநகருக்கு மாற்றம் செய்வதற்கான உத்தரவு அரசின் முதன்மைச் செயலர் ப.செந்தில்குமாரால் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் 13-ஆம் தேதி கல்லூரிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து நாங்கள் செல்வதற்கு ஒப்புக்கொண்டோம். இப்போது அதே முதன்மையர், கட்டடத்தை கொடுக்க வாய்ப்பில்லை என்பது போல் கூறுகிறார். ஏனென்றால் தாய் (TAEI) கட்டடம் மெடிக்கல் மிஷன் வழிகாட்டுதலில் கட்டப்பட்டுள்ளது. அதில் இடம் வழங்குவதில் நிர்வாக ரீதியாக பிரச்சனை உள்ளது  என்று கூறியிருக்கிறார்.    அமைச்சருடன் வந்திருந்த மதுரை ஆட்சியர்  அனீஷ்சேகரும் கூட “ மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் தந்தால்...” என்ற தொனியில்  பேசினார். மதுரை ஆட்சியர் கூற்றுப்படி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இடம் வழங்கினால் மெத்த மகிழ்ச்சி என்றனர்.

முதுநிலை படிப்புக்கு வெளிமாநிலம் செல்லும் நிலை

மற்றொரு மாணவர் கூறுகையில், “தமிழ கத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே ஹோமி யோபதி மருத்துவக் கல்லூரி இது தான். கடந்தாண்டு மாணவர் சேர்க்கையின் போது ஒரு வருடத்தில் கட்டடங்கள் சீரமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், எந்தப் பணியும் நடக்கவில்லை. கடந்தாண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மூன்று, நான்கு மாதங்கள் வகுப்புகள் நடைபெற வில்லை. ஆன்-லைனில் மட்டுமே நடைபெற்றது. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த டோலி என்ற மாணவி அகில இந்திய அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். இங்கு முதுகலை படிப்பு தொடங்கப்படாததால் அவர் வேறு மாநிலத்திற்குத் தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்.   அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தபடி அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்கு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  முதன்மையருக்கு அறிவுறுத்த வேண்டும். அதை விடச் சிறந்தது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைதான்.  முதுகலை மருத்துவப் படிப்பை உடனடியாகத் தொடங்க வேண்டுமென்றார்.

ஆய்வுக்குழு தகவல்

இதற்கிடையில் தியாகராசர் பொறியியல் கல்லூரியின் ஆய்வுக்குழு ஒன்று கல்லூரியை ஆய்வு செய்துள்ளது. அப்போது மண்ணில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தண்ணீர் செல்வதில் தான் சிக்கல் உள்ளது. தண்ணீர் செல்வதற்கு உரிய வடிகால் வசதிகள் செய்தால் போதுமானது எனக் கூறியுள்ளனர். இந்தத்  தகவல் தமக்கு தொலைபேசி வாயிலாகக் கிடைத்தது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  ஒரு அதிகாரி  மாணவர்களிடம் கூறியிருக்கிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சனையில் தலையிட்டு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். விரைவில் முதுகலைப் படிப்பு தொடங்க வேண்டும். மருத்துவத்துறை அமைச்சர்அறிவித்துள்ளபடி இங்குள்ள 25 ஏக்கர் நிலத்தில் புதிய கட்டட கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்து கின்றனர் மாணவர்களின் பெற்றோர்.