1 ) 3000ஆண்டு பழைய ஜீன்ஸ் ஆடை
சீன டாரிம் வடிகால் பகுதியிலுள்ள யாங்கை இடுகாட்டில் தோண்டி எடுக்கப்பட்ட மனிதர்கள் அணிந்திருந்த கால் சராய்கள்தான் முதன்முதலாக நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட உடை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவை 3000-3200 ஆண்டுகளுக்கு முன் நெய்யப்பட்டவையாம். பன்னாட்டுத் தொல்லியியலாளர்கள்,ஆடை வடிவமைப்பாளர்கள்,புவியியலாளர்கள்,வேதியியலாளர்கள் ஆகியோர் கொண்ட குழு இந்தக் கால்சராய்கள் எவ்வாறு செய்யப்பட்டன என்பதை கண்டறிந்து கடினமாக உழைத்து அதைப்போன்ற ஒரு மாதிரியை உண்டாக்கியுள்ளார்கள். சீன யாங்கை கால் சராய்கள் நெய்யப்பட்ட விதம் அற்புதமாக இருக்கிறதாம்.எங்குமே கத்திரிக்கப்பட்ட அடையாளங்கள் இல்லை.எனவே அணிபவருக்கு ஏற்ற அளவில் நெய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் ஆய்வாளர் வேங்கனர். ஊடும் பாவுமாக நெய்யப்படும் டுவில் வீவ் (twill weave) எனப்படும் முறையில் நெய்யப்பட்டுள்ளது.ஆடை தயாரிப்பு வரலாற்றில் இது மிகப் பெரும் புதுமை. இரண்டு கால்களும் மேல்பக்கமாக அகன்று ஒரு பட்டையான கனமான துணியால் இணைக்கப்பட்டுள்ளன. கீழ்பக்கம் இறுக்கமாக இருக்கும் இந்த கால்சராய் குதிரையின் வெற்றுடம்பில் சவாரி செய்ய வசதியாக இருந்திருக்கிறது. இத்தகைய ஆடைகள் ஐரோப்பாவில் சீனாவுக்கு 200ஆண்டுகள் முன் நெய்யப்பட்டன எனவும் இரு பகுதிகளிலும் தனித்தனியே இவை தோன்றியிருக்கலாம் எனவும் ஆஸ்திரிய நாட்டு ஆடை தொல்லியல் ஆய்வாளர் கரீனா குரோமர் கூறுகிறார். இன்றைய டெனிம் ஜீன்ஸ் கால் சராய்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் கையாளப்பட்ட சீன யாங்கை நெசவு நுணுக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையே.
2 ) இயற்பியலில் வளரி
இலக்கை தாக்கிவிட்டு எறிந்தவரிடமே திரும்பிவரும் ஆயுதம் வளரி என்கிறோம். ஆங்கிலத்தில் பூமராங்(‘boomerang’). அதைப்போல சில குவாண்டம் துகள்கள் ஒரு சிறிய சுண்டுதலுக்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வருகிறது என இயற்பியல் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்வு குவாண்டம் பூமராங் என அழைக்கப்படுகிறது. இது ஒழுங்கமைக்கப்பட்ட பொருட்களை விட சமச்சீரற்றதும் அணுக்களின் அமைப்பில் குறைபாடுகள் உடையதுமான பொருட்களிலேயே நிகழ்கிறதாம். போதுமான அளவு சீர்குலைவு உள்ள பொருட்களில் எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட பகுதியிலேயே தேங்கிவிடுகின்றன.அவைகளால் அதிக தூரம் செல்ல முடியாமல் மின்சாரத்தைக் கடத்த முடிவதில்லை. உலோகக் கடத்தியாக இல்லாமல் இன்சுலேட்டராக மாறிவிடுகிறதாம். இந்த தன்மையும் பூமராங் நிகழ்விற்கு தேவைப்படுகிறது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சுண்டிவிடப்பட்ட எலெக்ட்ரான்கள் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வருவது மட்டுமல்ல அங்கே அது நின்று விடுகிறது. இந்த விதத்தில் அது பூம்ராங்கிடமிருந்து வேறுபடுகிறது.எறிந்தவர் பிடிக்காவிட்டால் பூமராங் போய்க்கொண்டேயிருக்குமாம். எறியப்பட்ட பந்தை பழக்கப்பட்ட நாய் கவ்விக்கொண்டு நம்மிடம் வந்து நின்றுவிடுவது போல எலெக்ட்ரான்கள் செயல்படுகிறது என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழக இயற்பியலாளர் டேவிட் வெல்ட்
3 ) அசைவமும் சைவமும் கலந்தது எப்போது?
தென்மேற்கு ஐரோப்பாவில் டான்யூப் நதிக்கரையோரத்தில் 11500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்யவில்லை.ஆனால் 3000ஆண்டுகளுக்குப் பின் விவசாயம் தோன்றுவதற்கான அடிப்படையை அவர்கள்தான் ஏற்படுத்தினார்கள் என்கிறது ஒரு ஆய்வு.வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வந்த இந்த மக்கள் தானாக வளர்ந்த காட்டுப்பயிர்களை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சேகரித்து உண்டு வந்தார்கள். இதற்குப் பிறகுதான் இடம் பெயர்ந்து வந்த தென்மேற்கு ஆசிய மக்கள் நாட்டுப் பயிர்களையும் தாவரங்களையும் வளர்க்கும் முறையை தொடங்கினர்கள் என்கிறார் ரோம் நாட்டை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் எம்மானுவல் கிரிஸ்டியானியும் அவரது குழுவினரும். செர்பியா மற்றும் ருமேனியா பகுதிகளில் தோண்டிஎடுக்கபப்ட்ட 60மனிதப் பற்களில் ஸ்டார்ச் துணுக்குகளும் காட்டு தானிய செல் அமைப்புகளும் காணப்பட்டனவாம்.17கல் ஆயுதங்களிலும் இவை காணப்பட்டன.இவை 8600ஆண்டுகளுக்கு முந்தியவை. காட்டு தானியங்களை கல் ஆயுதங்களால் மாவாக்கியிருக்கலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
4 ) நிறம் மாறும் பூக்கள்
பூக்கள் ஏன் பல நிறங்களில் இருக்கின்றன:அவை பூக்களுக்கு என்ன முக்கியத்துவம் போன்ற கேள்விகள் விஞ்ஞானி சி.வி.ராமன் மனதில் எழுந்தன. அதன் விளைவாக தனது இறுதிக் காலத்தில் பூக்களின் நிறங்கள் குறித்தும் மகரந்தச் சேர்க்கைக்கும் எதிரிகளிடமிருந்து பூக்களைக் காப்பாற்றுவதில் அதன் பங்கு குறித்தும் ஆய்வு செய்தார். சூரிய ஒளியை பூக்களின் இதழ்கள் பிரதிபலிப்பது குறித்த அவரது பதிவை Floral colours and the physiology of vision (ias.ac.in என்கிற இணைப்பில் சென்று பார்க்கலாம். அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட கேரள சோதனை சாலையில்(C.V. Raman Laboratory of Ecological Informatics in the Digital University,Kerala) பூக்களின் நிறப்பிரிகை தொகுப்பு ஒன்றை பேராசிரியர் ஆதிரா ஏற்படுத்தியுள்ளார். மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பல்லுயிர் கேந்திர மையங்களான பொன்முடி,மூணாறு,பாணாசுரா,பிரமகிரி,செம்பரா போன்ற இடங்களுக்கு சென்று 700க்கும் மேற்பட்ட பூக்களின் நிறப்பிரிகையை ஒப்ப்ட்டுள்ளார்.மனிதர்களுக்கும் வண்டுகளுக்கும் பூக்களின் வண்ணம் வெவேறு விதமாக தோன்றுகிறது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.நமக்கு வெண்மையாகத் தெரியும் மல்லிகை வண்டுகளுக்கு பச்சையாகத் தெரியுமாம். நமக்கு சிவப்பாகத் தெரியும் தொட்டால்சுருங்கி பூச்சிகளுக்கு அதே போல் பச்சையாகத் தோன்றுமாம். மகரந்த சேர்க்கை செய்யும் வண்டுகள் புற ஊதா,ஊதா மற்றும் பச்சை வண்ணங்களை விரும்புகின்றனவாம். பல்லுயிர் மற்றும் சூழலியல் சேவைகளுக்கான அறிவியல் மேடை, 2016 இல் வெளியிட்ட ஆய்வில் அழிந்து வரும் மகரந்த சேர்க்கையினங்களினால் சுற்று சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. இந்த துறையில் அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் வேளையில் நமது நாடு உணவுப் பயிர்கள் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறோம் என்கிறார் ஆதிரையின் வழிகாட்டியான பேராசிரியர் ஜெய்சங்கர். அழிந்துவரும் பூச்சியினங்களை நிலைப்படுத்துவதில் மகரந்த சேர்க்கையினங்களை ஈர்க்கும் பூக்களின் நிறம் மிக மிக முக்கியமானது.எனவே இந்த ஆய்வு பயிர்களை மேம்படுத்தும் அரசு கொள்கையோடு பெரும் தொடர்புடையது.